திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை


திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு காரணமாக அருவியில் 2-வது நாளாக இன்று சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி

தண்ணீர் வெளியேற்றம்

குமரி மாவட்டத்தில் அணைகளின் நீர்வரத்துப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை அணை நிரம்பிய நிலையில், அந்த அணையிலிருந்து நேற்று வினாடிக்கு 1000 கன அடி உபரித் தண்ணீர் மறுகாகல் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து 2-வது நாளாக இன்று வினாடிக்கு 1000 கன அடி உபரித் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதில் அணையிலிருந்து வெளியேறும் உபரித்தண்ணீர் திற்பரப்பு அருவி வழியாகப் பாயும் நிலையில், திற்பரப்பு அருவியில் 2-வது நாளாக இன்று சுற்றுலாப் பயயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்

விடுமுறை நாளான இன்ற திற்பரப்பு அருவியில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர். இந்நிலையில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இவர்கள் ஏமாற்றமடைந்த நிலையில் அருவின் அருகில் நின்று தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதை பார்த்தவாறு நின்றனர். இதில் பலர் குழந்தைகளுடன் அருவிப்பகுதியுள்ள பூங்காவில் விளையாடினர்.

இதற்கிடையே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவியின் மேற்பகுதியில் பாறைகள் வழியாகப் பாயும் கோதையாற்று தண்ணீரில் இறங்கி குளித்தனர்.

படகு சவாரி நடைபெற்றது

இந்நிலையில் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இங்குள்ள தடுப்பணையில் படகு சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்தனர்.


Next Story