கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 19 March 2023 7:00 PM GMT (Updated: 19 March 2023 7:00 PM GMT)

வாரவிடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மழையில் நனைந்தபடி படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர்.

திண்டுக்கல்

சுற்றுலா பயணிகள் படையெடுப்பு

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு வார விடுமுறைையயொட்டி தமிழ்நாட்டின் பிற பகுதிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

அதிகாலை முதலே இருசக்கர வாகனங்கள், கார், வேன், பஸ்கள் என ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் படைெயடுத்தனர். கொடைக்கானலின் நுழைவுவாயில் பகுதியில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அதன் எழில் கொஞ்சும் அழகை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

இதேபோல் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, மோயர் பாயிண்ட், பில்லர் ராக், பைன்மரக்காடு, குணா குகை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களை கண்டுகளித்தனர். நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியில் படகுசவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.

மழையில் நனைந்தபடி...

இந்த நிலையில் நேற்று பகல் நேரத்தில் திடீரென கொடைக்கானலில் பலத்த மழை கொட்டியது. அப்போது, நட்சத்திர ஏரியில் மழையில் நனைந்தபடி சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்தனர். சுமார் 10 நிமிடங்கள் நீடித்த மழை காரணமாக பகல் நேரத்திலேயே குளிர் நிலவியது.

இருப்பினும் மதியம் 3 மணி முதல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. தொடர்ந்து கடந்த 3 நாட்களாக மழை பெய்ததால் வனப்பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீ கட்டுக்குள் வந்தது. இதனால் வனத்துறையினர் நிம்மதி அடைந்தனர்.

வழக்கமாக ஏப்ரல் முதல் வாரத்தில் கொடைக்கானலில் குளுகுளு சீசன் தொடங்குவது வழக்கம். ஆனால் தற்போது கோடை மழை தொடங்கியுள்ளதால் விரைவில் சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Related Tags :
Next Story