கோடை விடுமுறையையொட்டி மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கோடை விடுமுறையையொட்டி மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

கோடை விடுமுறையையொட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள புராதன சின்னங்களை ரசித்து பார்த்தனர்.

செங்கல்பட்டு

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வருகின்றன. ஆயிரக்கணக்கான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் வந்து ரசிக்கின்றனர். இந்த நிலையில் தற்போது கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையிலும், பொது தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதை முன்னிட்டு மாமல்லபுரத்திற்கு உள்நாட்டு பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

நேற்று கோடை விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை 10 மணி முதலே மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கினர். கடற்கரை கோவில், ஐந்தரதம் போன்ற புராதன பகுதிகள் மக்கள் கூட்டத்தால் களைகட்டியது.

கடற்கரை பகுதியில் குளிக்க வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியும் பலர் ஆபத்தை உணராமல் கடலில் குளித்தை காண முடிந்தது. மேலும் கடற்கரையில் பாறைகள் உள்ள ஆபத்தான பகுதிகளில் குளிக்க வேண்டாம் என்று பொதுமக்களிடம் போலீசார் அவ்வப்போது எச்சரித்து, அறிவுறுத்தி கொண்டே இருந்தனர்.

போக்குவரத்து நெரிசல்

குறிப்பாக பள்ளிகள் மூடப்பட்டதால் தங்கள் பெற்றோருடன் கோடை விடுமுறையை கழிக்க வந்த சிறுவர், சிறுமிகளும் பள்ளி விடுமுறை விடப்பட்ட உற்சாகத்தில் கடலில் மகிழ்ச்சியுடன் குளித்ததையும் காண முடிந்தது. நேற்று வெயில் கடுமையாக வாட்டி வதைத்தால் பெரும்பாலான மக்கள் குடை பிடித்த நிலையில் புராதன சின்னங்களை பார்த்து ரசித்ததை காண முடிந்தது.

கடற்கரையில் திருட்டு சம்பவங்களை தடுக்க மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில் ஏராளமான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பயணிகள் வருகை அதிகமிருந்த காரணத்தால் நேற்று சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கிழக்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி, கடற்கரை சாலை பகுதியில் கடும் நெரிசலில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் சாலையில் சென்ற வாகனங்களை நெரிசலில் சிக்கிவிடாமல் இருக்க மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையில் போக்குவரத்து போலீசார் காலை நேரங்களில் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலும், மாலை நேரத்தில் மாமல்லபுரம் நகர பகுதியிலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.


Next Story