ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x

ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் தாவரவியல் பூங்காவை கண்டு ரசித்தனர்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் தாவரவியல் பூங்காவை கண்டு ரசித்தனர்.

கோடை விடுமுறை

நீலகிரி மாவட்டம் சிறந்த கோடை வாசஸ்தலமாக திகழ்கிறது. இங்குள்ள சுற்றுலா தலங்களை வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் ஊட்டிக்கு வருகின்றனர். கடந்த மாதம் கோடை விழாவையொட்டி சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள், கண்காட்சிகள் நடத்தப்பட்டது.

கோடை சீசன் முடிந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. ஏப்ரல், மே மாத கோடை சீசனில் 7½ லட்சம் சுற்றுலா பயணிகள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை கண்டு ரசித்தனர். தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை கடைசி நாளான நேற்று ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தாவரவியல் பூங்காவுக்கு வந்தனர்.

சுற்றுலா பயணிகள்

அவர்கள் பூங்காவில் பெரிய புல்வெளி மைதானம், கண்ணாடி மாளிகை, ஜப்பான் பூங்கா, இத்தாலியன் பூங்கா, இலை பூங்கா போன்ற இடங்களை பார்வையிட்டனர். புல்வெளியில் தங்களது குடும்பத்தினருடன் அமர்ந்து ஓய்வெடுத்தனர். பூத்து குலுங்கிய மலர்கள் முன்பு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதேபோல் ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. அங்கு மோட்டார் படகுகளில் சவாரி செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

மேலும் மிதி படகு, துடுப்பு படகுகளில் ஏரியின் அழகை ரசித்த படி படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். தொட்டபெட்டா மலைசிகரம், பைக்காரா படகு இல்லம், ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் இருந்தது. ஊட்டி மலை ரெயிலில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்ய ஆர்வம் காட்டினர். ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால், நகரில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. லவ்டேல் சந்திப்பு, லோயர் பஜார், கமர்சியல் சாலை உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.


Next Story