பூலாம்பட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


பூலாம்பட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

விடுமுறை தினமான நேற்று எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணை நீர்த்தேக்க பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

சேலம்

எடப்பாடி:-

விடுமுறை தினமான நேற்று எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணை நீர்த்தேக்க பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

பூலாம்பட்டி கதவணை

மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டதன் காரணமாக கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன்காரணமாக பூலாம்பட்டியில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பூலாம்பட்டியில் மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.

இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளது. இதனால் பூலாம்பட்டி கதவணையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

படகு சவாரி

இதனிடையே விடுமுறை தினமான நேற்று அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் பூலாம்பட்டிக்கு வந்தனர். அங்கு அவர்கள் கதவணைப்பகுதியில் உற்சாகமாக விசைப்படகு சவாரி செய்தும், நீர்மின் நிலையம், கதவணையில் இருந்து நீர் வெளியேறும் பகுதி, நீர் உந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளை கண்டு மகிழ்ந்தனர்.

காவிரித்தாய் கோவில், நந்திகேஸ்வரர் சன்னதி, கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் சாமி தரிசனம் செய்தனர். சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையிலான கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பூலாம்பட்டிக்கு வந்த நிலையில், படகு துறை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது, மகிழ்ச்சி அளிப்பதாக இப்பகுதி வியாபாரிகள் மற்றும் வாடகை வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.


Next Story