ஞாயிறு விடுமுறை தினத்தையொட்டி மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்


ஞாயிறு விடுமுறை தினத்தையொட்டி மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

ஞாயிறு விடுமுறை தினத்தையொட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். புராதன சின்னங்களை ரசித்து பார்த்தனர்.

செங்கல்பட்டு

சுற்றுலா பயணிகள் வருகை

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் வந்து ரசிக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது கோடை காலம் மற்றும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதை முன்னிட்டு மாமல்லபுரத்திற்கு உள்நாட்டு பயணிகள் வருகை அதிகம் காணப்படுகிறது.

நேற்று கோடை விடுமுறை மற்றும் ஞாயிற்றுகிழமை விடுமறை என்பதாலும், வருகிற 7-ந்தேதி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் குடும்பத்துடன் மாமல்லபுரம் வருகைதந்ததை காண முடிந்தது. கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டை பாறை, புலிக்குகை போன்ற புராதன சின்ன பகுதிகள் மக்கள் கூட்டத்தால் களைகட்டி காணப்பட்டது.

போலீசார் அறிவுறுத்தல்

நேற்று கடும் வெயில் வாட்டி வதைத்தால் கடலில் குளிக்க வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியும் பலர் ஆபத்தை உணராமல் கடலில் குளித்ததை காண முடிந்தது. மேலும் கடற்கரையில் பாறைகள் உள்ள ஆபத்தான பகுதிகளில் குளிக்க வேண்டாம் என்று பொதுமக்களிடம் ரோந்து போலீசார் அவ்வப்போது எச்சரித்து, அறிவுறுத்தி கொண்டே இருந்தனர். குறிப்பாக பள்ளிகள் மூடப்பட்டதால் தங்கள் பெற்றோர்களுடன் கோடை விடுமுறையை கழிக்க வந்த சிறுவர், சிறுமிகளும் பள்ளிகள் வருகிற 7-ந்தேதி திறக்கப்படுவதால் கோடை விடுமுறையின் இறுதி வாரத்தை கொண்டாடும் வகையில் கடலில் மகிழ்ச்சியுடன் குளித்ததை காண முடிந்தது.

கடற்கரை கோவில், வெண்ணை உருண்டை பாறை, ஐந்துரதம் இடங்களில் ரூ.40 நுழைவு சீட்டு வாங்குவதற்காக தொல்லியல் துறையின் கட்டண கவுண்ட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் பலர் வெகு நேரம் வரிசையில் காத்திருந்து நுழைவு சீட்டு எடுத்து சென்றதையும் காண முடிந்தது.

போக்குவரத்து நெரிசல்

கடற்கரையில் திருட்டு சம்பவங்களை தடுக்க மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்ளிட்ட ஏராளமான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பயணிகள் வருகை அதிகமிருந்த காரணத்தால் நேற்று சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. கிழக்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி, கடற்கரை சாலை பகுதியில் கடும் நெரிசலில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் சாலையில் சென்ற வாகனங்களை நெரிசலில் சிக்கிவிடாமல் இருக்க மாமல்லபுரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையில் போக்குவரத்து போலீசார் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலும், மாமல்லபுரம் நகர பகுதியிலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியதை காண முடிந்தது. கோடை விடுமுறையின் கடைசி ஞாயிறு என்பதால் சுற்றுலா வந்த பயணிகளின் கூட்டத்தில் மாமல்லபுரத்தில் முக்கிய புராதன சின்ன மையங்களில் உள்ள சாலையோர கடைகளில் வியாபாரம் களைகட்டியது.


Next Story