தண்டவாள பராமரிப்பு பணி: நாளை முதல் 30-ந் தேதி வரை தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம்


தண்டவாள பராமரிப்பு பணி: நாளை முதல் 30-ந் தேதி வரை தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம்
x

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடப்பதால், வருகிற 30-ந் தேதி வரை தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை

திண்டுக்கல்-அம்பாத்துரை ரெயில் நிலையங்களுக்கிடையே நடக்கும் பராமரிப்பு பணிக்காக, நாளை வருகிற 16-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16322) செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் மட்டும் சுமார் 90 நிமிடங்கள் காலதாமதமாக இயக்கப்படும். மேற்கண்ட நாட்களில் சென்னையில் இருந்து மதுரை வழியாக குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16127) மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் சுமார் 70 நிமிடங்கள் காலதாமதமாகவும், வெள்ளிக்கிழமைகளில் சுமார் 95 நிமிடங்கள் காலதாமதமாகவும் இயக்கப்படும். இதனால் மேற்கண்ட நாட்களில் மணியாச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயிலுக்கு (வ.எண்.06672) இந்த ரெயிலின் இணைப்பு ரெயில் சேவை இருக்காது.

ராஜபாளையம் - சங்கரன்கோவில் பிரிவில் நடக்கும் பணிக்காக, மதுரையில் இருந்து நண்பகல் 11.30 மணிக்கு செங்கோட்டை புறப்படும் எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் மற்றும் செங்கோட்டையில் இருந்து நண்பகல் 11.50 மணிக்கு மதுரை புறப்படும் எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் ஆகியன வருகிற 16-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. தென்காசி - செங்கோட்டை இடையேயான பராமரிப்பு பணிக்காக, வருகிற 20-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை மதுரையிலிருந்து மாலை 5.15 மணிக்கு செங்கோட்டை புறப்பட்டு செல்லும் எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் மற்றும் நெல்லையில் இருந்து மாலை 6.15 மணிக்கு செங்கோட்டை புறப்பட்டு செல்லும் ரெயில் ஆகியன தென்காசி வரை மட்டும் இயக்கப்படும்.

கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் வருகிற 21, 22-ந் தேதிகளில் நடக்கும் பராமரிப்பு பணிக்காக, பாலக்காடு - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16731) மற்றும் திருச்செந்தூர்- பாலக்காடு ரெயில் (வ.எண்.16732) ஆகியன சாத்தூர் - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். குமாரபுரம் ரெயில் நிலைய பராமரிப்பு பணிக்காக, வருகிற 28,29-ந் தேிகளில் மேற்கண்ட ரெயில்கள் கோவில்பட்டி - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். மேலும் இந்த ரெயில்கள் வருகிற 30-ந் தேதி மதுரை - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இதில், திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் ரெயில் (வ.எண். 16732) மதுரையிலிருந்து மாலை 6.30 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story