டிராக்டர்-மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி


டிராக்டர்-மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி
x

பொதட்டூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.

சென்னை

பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர் பேட்டை நல்ல தண்ணீர் குளம் தெருவில் வசித்து வந்தவர் பாபு (வயது 47). கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வாணி விலாசபுரம் கிராமத்திலிருந்து பொதட்டூர்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பொதட்டூர்பேட்டையில் இருந்து வாணி விலாசபுரம் நோக்கி ஒரு டிராக்டர் சென்று கொண்டிருந்தது. வழியில் மசூதி அருகே மோட்டர் சைக்கிளில் வந்த பாபு மீது டிராக்டர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பாபு படுகாயமடைந்தார். டிராக்டரை ஓட்டி வந்தவர் டிராக்டரை அங்கயே விட்டு விட்டு தப்பி ஓடினார். பாபுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக பொதட்டூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து அவரது மனைவி மனோன்மணி (40) பொதட்டூர் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பாபுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் அந்த டிராக்டர் ராமாபுரம் காலனியை சேர்ந்த சண்முகம் (48) என்பவருக்கு சொந்தமான என்று தெரியவந்தது. போலீசார் டிராக்டரை ஓட்டி வந்து தலைமறைவான டிரைவரை தேடி வருகின்றனர். விபத்தில் இறந்த பாபுவுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story