வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை


வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 11 April 2023 6:45 PM GMT (Updated: 11 April 2023 6:47 PM GMT)

பூதப்பாண்டி அருகே கடன்தொல்லையால் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டி அருகே கடன்தொல்லையால் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வியாபாரி

நெல்லை மாவட்டம் நாங்குநேரி காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ(வயது46). இவருக்கும் குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ஞாலம் அந்தரபுரம் கோவில் தெருவை சேர்ந்த சசிகலா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

ராஜூ மும்பையில் ெமடிக்கல் ஏஜென்சியில் வேலை செய்து வந்தார். கொரோனா காலத்தில் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டார். இதையடுத்து சொந்தமாக இட்லிக்கடை வைத்து நடத்தி வந்தார். இதற்காக தனது வீட்டின் பேரில் ஒருவரிடம் கடன் வாங்கியுள்ளார்.

தொழிலில் நஷ்டம்

இந்தநிலையில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கிடையே கடனுக்காக பணம் கொடுத்தவர் ராஜூவின் வீட்டை பூட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்த ராஜூ கடந்த 2 வாரங்களுக்கு முன்பு குடும்பத்துடன் பூதப்பாண்டி அருகே அந்தரபுரத்தில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு வந்துள்ளார். மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்த அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்தனர். இதையடுத்து ராஜூ குடும்பத்துடன் மும்பைக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி நேற்று அதிகாலை 4.30 மணி ரெயிலில் மும்பை செல்ல டிக்கெட் எடுத்திருந்தனர்.

தற்கொலை

இந்தநிலையில் நேற்று அதிகாலையில் எழுந்த ராஜூவின் மனைவி மற்றும் மகன்கள் மும்பை செல்ல புறப்பட்டனர். ஆனால், ராஜூ எழுந்து வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவர்கள் அந்த அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது ராஜூ தூக்கில் தொங்குவதை கண்டு பதறினர். உடனே, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ராஜூ இறந்தது தெரியவந்தது. அவரது உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

இதுபற்றி பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ராஜூ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஊருக்கு செல்ல இருந்த நிலையில் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story