திருத்தணி முருகன் கோவிலில் வியாபாரிகள் சாலை மறியல்

திருத்தணி முருகன் கோவிலில் வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
திருத்தணியில் முருகன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கடைகள் கட்டப்பட்டு ஏலத்தின் மூலம் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. இதில் பூக்கடை, தேங்காய் விற்பனை கடை, சிற்றுண்டி கடை, தேனீர் கடை, குளிர்பான கடைகள் உள்பட பல கடைகள் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே கோவிலுக்கு வரும் பக்தர்களை வழிமறித்து கடைகாரர்கள் மிரட்டல் பாணியில் கடைகளுக்கு அழைத்து சென்று அதிக விலைக்கு பொருட்களை வாங்க கட்டாயப்படுத்துவதாக கோவில் நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது.
இதனையடுத்து, கோவில் துணை ஆணையர் விஜயா சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நகரும் நிழற்குடையை கோவில் நுழைவுப்பகுதியில் இருந்து மாடவீதி வரை கடைகளுக்கு முன்பு நிறுத்தி வைத்தார். இதனால் தங்கள் கடைக்கு வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி நேற்று கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கடையை பூட்டிக்கொண்டு மலைப்பாதை நுழைவுப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ், இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் அவர்களை சமாதானப்படுத்தி கோவில் கண்காணிப்பாளர் சித்ராதேவியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இனி வரும் நாட்களில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வியாபாரம் செய்வதாக கடைகாரர்கள் உறுதியளித்தனர். இதனையடுத்து, நகரும் நிழற்குடைகளை அகற்றப்பட்டது. பின்னர் ஊழியர்கள் கடையை திறந்து வியாபாரம் செய்தனர்.