பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்


பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்
x

பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்

திருப்பூர்

காங்கயம்

சிவன்மலை தைப்பூச தேர்திருவிழாவை முன்னிட்டு காங்கயம் தமிழர் பாரம்பரிய கலை மன்றம் சார்பாக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

சிவன்மலை தைப்பூச தேர்திருவிழாவை முன்னிட்டு, காங்கயம் தமிழர் பாரம்பரிய கலை மன்றம் சார்பாக சிவன்மலையில் காங்கயம் ஊராட்சி ஒன்றிய திடலில் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியை தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தனர்.

தேர் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக 75 பெண்கள் கலந்து கொண்டு ஆடிய ஒயிலாட்டம் நிகழ்ச்சியும், ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு ஆடிய பெருஞ்சலங்கையாட்டமும் நடைபெற்றது. பெருஞ்சலங்கை ஆட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டு காலில் சலங்கை கட்டி ஆடினார்கள். தேர் திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக தமிழர் பாரம்பரிய மன்றத்தின் வண்ணமயில் கும்மியாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சியை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலக்குழு தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

இதில் 55 பேர் கலந்து கொண்டு வண்ணமயில் கும்மியாட்டம் அரங்கேற்றம் செய்தனர். சிறு வயது குழந்தைகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர். நிகழ்ச்சியில் காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார், நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ், இயற்கை வேளாண் விஞ்ஞானி மயில்சாமி, கோவை நாதேகவுண்டன்புதூர் செல்லப்பன், ஒயிலாட்டம் ஆசிரியர்கள் கனகராஜ், வண்ணமயில் கும்மி ஆசிரியர்கள் செல்வகுமார், செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை காங்கயத்தில் 80-க்கும் மேற்பட்ட பெண்கள் மட்டுமே நடத்தி வரும் காங்கயம் தமிழர் பாரம்பரிய கலை மன்றத்தினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.



Next Story