பராமரிப்பு பணிக்காக போக்குவரத்து துண்டிப்பு


பராமரிப்பு பணிக்காக போக்குவரத்து துண்டிப்பு
x

சாத்தூரில் முன்னறிவிப்பின்றி பராமரிப்பு பணிக்காக போக்குவத்து துண்டிக்கப்பட்டதால் 30 கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர்.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூரில் முன்னறிவிப்பின்றி பராமரிப்பு பணிக்காக போக்குவத்து துண்டிக்கப்பட்டதால் 30 கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர்.

ரெயில்வே கேட் மூடல்

இருக்கன்குடி மார்க்கமாக சந்தையூர், ராமலிங்காபுரம், அணைக்கரைப்பட்டி, கோல்வார்பட்டி, இருக்கன்குடி, கோட்டூர், புதூர், நாகலாபுரம், விளாத்திகுளம், மேலக்கரந்தை, வெம்பூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ஊர்களுக்கு செல்லும் பிரதான சாலையாக இருந்து வருவது ெரயில்வே பீடர் சாலை ஆகும்.

இந்தநிலையில் ெரயில்வே பராமரிப்பு பணி காரணமாக சாத்தூர்- இருக்கன்குடி மார்க்கமாக செல்லும் சாலையில் உள்ள ெரயில்வே கேட் நேற்று திடீரென மூடப்பட்டது. கேட் மூடப்பட்டதால் இப்பகுதிகளுக்கு செல்லும் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

மாற்றுப்பாதை

இதன் மாற்றுப்பாதையாக ஆற்றுப்பாலத்தின் அருகே உள்ள சுடுகாட்டுப்பாதை இருந்து வருகிறது. ஆனால் இந்தப்பாதையில் பாதாளச்சாக்கடை பணிக்காக குழி தோண்டப்பட்டு இருப்பதால் இந்த சாலையும் துண்டிக்கப்பட்டது.

நேற்று ஒரே நேரத்தில் 2 சாலைகளிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் 30 கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் செல்ல வழியின்றி பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். எந்தவித முன்னறிவிப்பின்றி 2 சாலைகளிலும் பணிக்காக போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ரெயில்வே பராமரிப்பு பணிகள், பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுவதை முன்கூட்டியே திட்டமிட்டு போக்குவரத்தை அதற்கு தகுந்தாற்போல் மாற்றி அமைத்து இருந்தால் பொதுமக்கள் சிரமப்படவேண்டிய நிலை இருக்காது. எந்தவித முன்னறிவிப்பு இல்லாமல் இனி பணிகளை தொடங்கக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினார்.


Next Story