குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளால் போக்குவரத்து பாதிப்பு


குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 28 Sep 2023 7:15 PM GMT (Updated: 28 Sep 2023 7:15 PM GMT)

நன்னிலம் அருகே குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

திருவாரூர்

நன்னிலம் அருகே குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

மத்திய பல்கலைக்கழகம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே நீலக்குடியில் மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்துக்கு கங்களாஞ்சேரி- மணக்கால் சாலை வழியாக செல்ல வேண்டும். இதே சாலை குடவாசல், கும்பகோணம் ஆகிய இடங்களுக்கு செல்வதற்கான முக்கிய வழித்தடமாக உள்ளது. இதனால் இந்த பகுதி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கங்களாஞ்சேரியில் இருந்து மணக்கால் வரை உள்ள இந்த சாலையில் கனரக வாகன போக்குவரத்தும் அதிகமாக உள்ளது. மத்திய பல்கலைக்கழகத்திற்கு செல்லக்கூடிய சாலை என்பதால் இந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து மிகுந்து, பரபரப்பாக காணப்படும்.

குழாய் பதிக்கும் பணிகள்

இந்த சாலையில் நீலக்குடி அருகே கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் அங்கு 'குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. மாற்றுப்பாதையில் செல்லவும்' என்பதை வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கும் வகையில் அறிவிப்பு பலகை எதுவும் வைக்கப்படவில்லை. இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். அவசர பணிக்காக செல்பவர்கள், ஆம்புலன்சில் செல்பவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அங்கு அறிவிப்பு பலகை வைக்கவும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story