கொரட்டூரில் பரிதாபம்: 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை - உயிரை விடுவதற்கு முன்பு உருக்கமான பதிவு


கொரட்டூரில் பரிதாபம்: 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை - உயிரை விடுவதற்கு முன்பு உருக்கமான பதிவு
x

சென்னை கொரட்டூரில் 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை

சென்னை கொரட்டூரில் உள்ள பாடி குமரன் நகர் காந்தி சாலையைச் சேர்ந்தவர் சேகர் (வயது 46). இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி. கொரட்டூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு பார்த்தசாரதி (17), பாரதி செல்வா (14) ஆகிய 2 மகன்கள் உண்டு. இதில், பார்த்தசாரதி கல்லூரியில் படித்து வரும் நிலையில், பாரதி செல்வா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில், கல்லூரிக்கு சென்று விட்டு மாலை 6 மணிக்கு பார்த்தசாரதி வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பாரதிசெல்வா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த கொரட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவன் பாரதி செல்வா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மாணவன் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மாணவன் தற்கொலை செய்வதற்கு முன்பு செல்போனில் வீடியோ ஒன்றை பதிவு செய்தது தெரியவந்தது. அதில், தனது சாவுக்கு காரணம் படித்த தனியார் பள்ளி நிர்வாகம் மட்டுமே என கூறியதுடன், சென்னையில் தனது உடலை புதைக்கக்கூடாது என்றும், சொந்த ஊரான ஆந்திர மாநிலம் நகரியில் தான் அடக்கம் செய்ய வேண்டும் எனவும் கூறி உள்ளார். மேலும் அதில் தனது உடலை எரித்தால் ஆவியாக வந்து உங்களை சுற்றிக்கொண்டே இருப்பேன் என்று கூறியது அதில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோவை கைப்பற்றிய கொரட்டூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து மாணவரின் சாவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story