மதுரையில் பரிதாபம் - மொபட் மீது லாரி மோதல்: என்ஜினீயரிங் மாணவி பலி

மதுரையில் மொபட் மீது லாரி மோதியதில் என்ஜினீயரிங் மாணவி பலியானார்
மதுரை திருப்பாலை மாடக்கோன் நகரை சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மகள் லோகஸ்ரீ (வயது 21). திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் மொபட்டில் குருவிக்காரன் சாலை வைகை வடகரையில் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, மொபட் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட லோகஸ்ரீக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிறிது நேரத்தில் லோகஸ்ரீ சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்ன சொக்கிக்குளத்தை சேர்ந்த கன்டெய்னர் லாரி டிரைவர் அருண்குமாரை (38) கைது செய்தனர்.