கோவிலில் சாமி கும்பிட்டபோது பரிதாபம்: அகல்விளக்கு தீ சுடிதாரில் பிடித்து பள்ளி மாணவி பலி


கோவிலில் சாமி கும்பிட்டபோது பரிதாபம்: அகல்விளக்கு தீ சுடிதாரில் பிடித்து பள்ளி மாணவி பலி
x

கோவிலுக்கு சாமிக்கும்பிட சென்றபோது கோவிலில் இருந்த அகல் விளக்கு தீ பிடித்து பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே கொட்டையூர் நரசமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 47). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஹேமாவதி (15). இவர் 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த மே மாதம் 14-ந் தேதியன்று ஹேமாவதி அதேப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

அப்போது கோவிலில் இருந்த அகல் விளக்கில் எரிந்து கொண்டிருந்த தீ எதிர்பாராத விதமாக ஹேமாவதியின் சுடிதாரில் பற்றியது. இதை ஹேமாவதி கவனிக்காததால் தீ அவரது உடலில் பரவியது. வலி தாங்காமல் ஹேமாவதி அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஹேமாவதி உடலில் பற்றிய தீயை அணைத்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் அங்கிருந்து திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஹேமாவதியின் தந்தை அண்ணாமலை மப்பேடு போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவிலுக்கு சாமி கும்பிட சென்றபோது அகல்விளக்கு தீ பற்றி சிறுமி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story