நெல்லைக்கு வரும் ரெயில்கள் தாமதம் - பயணிகள் அவதி


நெல்லைக்கு வரும் ரெயில்கள் தாமதம் - பயணிகள் அவதி
x

மதுரையில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக நெல்லைக்கு வரும் அனைத்து ரெயில்களும் தாமதமாக வந்தன.

நெல்லை,

தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்டத்தில் நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு வடமாநிலங்கள் மற்றும் வட மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்கள் ஒரு சில நேரங்களில் சிக்னல் கோளாறு, பேரிடர் காலங்களில் சிறிது தாமதமாக ரெயில் நிலையங்களை வந்தடையும்.

அந்த வகையில் மதுரை கூடலூர் பகுதியில் ஏற்பட்ட மின்சாரம் மற்றும் சிக்னல் கோளாறு காரணமாக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இன்று காலை நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்த ரெயில்கள் சுமார் ஒரு மணி நேரம் வரை காலதாமதமாக வந்தடைந்தது.

நெல்லைக்கு தினமும் காலை 6.45 மணிக்கு வந்து சேரும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக 7.45 மணிக்கும், தினமும் காலை 6.15 மணிக்கு நெல்லை வந்து சேரவேண்டிய செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக 7.15 மணிக்கு வந்து சேர்ந்தது.

தினமும் அதிகாலை 5.50-க்கு நெல்லை சந்திப்பு ரெயில்நிலையத்திற்கு வந்து சேரும் பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் 7 மணிக்கும், காலை 6.50-க்கு வந்து சேர வேண்டிய அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக 8 மணிக்கும் வந்து சேர்ந்தது. இதனால் ரெயில் பயணிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.


Next Story