ஆபத்தான நிலையில் காணப்படும் மின்மாற்றி


ஆபத்தான நிலையில் காணப்படும் மின்மாற்றி
x
தினத்தந்தி 10 Aug 2023 8:00 PM GMT (Updated: 10 Aug 2023 8:01 PM GMT)

மேலையூரில் நெல் கொள்முதல் நிலையம் அருகே ஆபத்தான நிலையில் காணப்படும் மின்மாற்றியை அகற்றிவிட்டு புதிதாக அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்:

மேலையூரில் நெல் கொள்முதல் நிலையம் அருகே ஆபத்தான நிலையில் காணப்படும் மின்மாற்றியை அகற்றிவிட்டு புதிதாக அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேதமடைந்த மின்மாற்றி

கும்பகோணம் அருகே உள்ள மேலையூர் அய்யனார் கோவில் அருகில் மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றி சேதமடைந்து காணப்படுகிறது. மின்மாற்றியை தாங்கி உள்ள தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பி மட்டுமே தெரிகிறது. மின்மாற்றியையொட்டி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் பணியாளர்கள் மற்றும் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

விவசாயிகள் அச்சம்

அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய கொள்முதல் நிலையத்திற்கு தினமும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்து செல்கின்றனர்.

எந்த நேரத்திலும் சாய்ந்து விழும் அபாய நிலையில் மின்மாற்றி உள்ளதால், சுமைதூக்கும் பணியாளர்கள் மற்றும் விவசாயிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

புதிதாக அமைக்க வேண்டும்

இந்த மின்மாற்றியை அகற்றி விட்டு புதிதாக மாற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு அபாய நிலையில் உள்ள மின்மாற்றியை அகற்றி விட்டு புதிதாக அமைக்க வேண்டும் என சுமை தூக்கும் பணியாளர்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story