போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தொடர்கிறது - தொழிற்சங்கங்கள் அறிவிப்பு


போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தொடர்கிறது - தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
x

போக்குவரத்து கழக தொழிலாளர்களுடைய கோரிக்கைகளுக்கு சுமுக உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவார்த்தை இன்று (புதன்கிழமை) தொடர்வதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த 7-ம் கட்ட பேச்சுவார்த்தை குரோம்பேட்டை, மாநகர் போக்குவரத்து கழக பயற்சி மைய வளாகத்தில் நேற்று நடந்தது. போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமை தாங்கினர்.

போக்குவரத்து துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.கோபால் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் போக்குவரத்து கழக உயர் அலுவலர்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை தொடரும்

பேச்சுவார்த்தை நேற்று காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை தொடர்ந்து நடந்தது. பின்னர் போக்குவரத்து கழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை இன்று (புதன்கிழமை) 11 மணிக்கு மீண்டும் நடக்கும் என்று அறிவித்தனர்.

தொடர்ந்து தொ.மு.ச. தலைவர் சண்முகம் எம்.பி., பொருளாளர் நடராஜன் ஆகியோர் கூட்டாக பேட்டி அளிக்கும் போது, 'பேச்சுவார்த்தை நாளை (அதாவது இன்று) காலை 11 மணிக்கு மீண்டும் நடைபெறும்' என்று அறிவித்தனர்.

உடன்பாடு எட்டப்படவில்லை

தொடர்ந்து சி.ஐ.டி.யு. சங்க தலைவர் சவுந்தரராஜன், பொதுச்செயலாளர் ஆறுமுகநயினார், எஸ்.எம்.எஸ். சங்க தலைவர் சுப்பிரமணிய பிள்ளை ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

போக்குவரத்து கழக ஊழியர்களின் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை 7-வது முறையாக நடைபெற்றது. சுமுக உடன்பாடு எட்டப்படும் என்று கூட்டத்தில் கலந்து கொண்ட 66 சங்க நிர்வாகிகளும் எதிர்பார்த்தோம். ஆனால் எதிர்பார்த்த படி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

அகவிலைப்படி உயர்வு

குறிப்பாக போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பேச்சுவார்த்தை என்பதை மாற்றி அமைக்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களின் 81 மாதம் அகவிலைப்படி உயர்வை வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையையும் பிரதானமாக வைத்து நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தோம். ஆனால் இது தொடர்பாக எங்களுக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை.

அதனால் எங்களுடைய கோரிக்கை தற்போது உடன்பாடு எட்டப்படவில்லை. தொடர்ந்து நாளை (இன்று) நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். அதிலும் அகவிலைப்படி உயர்வு கோரிக்கையை முதல்-அமைச்சரிடம் கலந்து பேசி அறிவிப்பதாகவும் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

விதிகளுக்கு புறம்பாக

அண்ணா தொழிற்சங்க பேரவை பொதுச் செயலாளர் கமலக்கண்ணன், தலைவர் தாடி ராசு ஆகியோர் கூறும்போது, 'விதிகளுக்கு புறம்பாக பேச்சுவார்த்தையின் போது சங்கங்களை தனித்தனியாக தனி அறையில் அழைத்து பேசியது சரியானது அல்ல.

அனைத்து சங்கங்களையும் ஒரே அறையில் அழைத்து பேசுவது தான் மரபு. இதனை இவர்கள் தற்போது மீறி உள்ளனர்' என்றனர்.


Next Story