டாக்டருக்கு படிக்காமல் சிகிச்சை; மதுரையில் போலி டாக்டர் கைது


டாக்டருக்கு படிக்காமல் சிகிச்சை; மதுரையில் போலி டாக்டர் கைது
x

டாக்டருக்கு படிக்காமல் சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்

மதுரை


மதுரை புதுஜெயில் ரோடு, முரட்டான்பத்திரி பகுதியில் உரிய அங்கீகாரம் இன்றி ஒருவர் வீட்டில் மருத்துவம் பார்த்து வருவதாக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார்கள் சென்றன. அது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன் பேரில் மருத்துவத் துறை இணை இயக்குனர் செல்வராஜ் தலைமையில் சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் இருசப்பன், மதுரை மாநகர சுகாதார அலுவலர் வினோத் மற்றும் மருந்து ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் முரட்டான்பத்திரி பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது புது ஜெயில்ரோடு மில் காலனியில் வசிக்கும் ராஜசேகரன் (வயது 48) என்பவர் உரிய அங்கீகாரம் இன்றி அந்த பகுதியில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. உடனே அங்கு சென்ற போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் ராஜசேகரன் டாக்டருக்கு படிக்கவில்லை என்பதும், அவர் போலி டாக்டர் என்பதும் தெரியவந்தது.

மேலும் அவர் மதுரை நரிமேடு பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை பிரிவில் மருத்துவ உதவியாளராக வேலை பார்த்து வந்ததும், இந்த அனுபவத்தின் மூலம் அவர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் தெரிய வந்தது. அதுமட்டுமின்றி அவர் பல கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து சிகிச்சை அளித்ததும் உறுதி செய்யப்பட்டது.

மேலும் அவரது வீட்டை சோதனையிட்டதில் அங்கிருந்து ஏராளமான மருந்து குப்பிகள், மாத்திரைகள், சிரஞ்சுகள் கைப்பற்றப்பட்டது. இது குறித்து மருத்துவக்குழுவினர் கரிமேடு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் ராஜசேகரனை கைது செய்தனர்.


Next Story