கீழ்பவானி பாசன கால்வாயில் முறிந்து விழுந்து கிடக்கும் மரங்கள்


கீழ்பவானி பாசன கால்வாயில் முறிந்து விழுந்து கிடக்கும் மரங்கள்
x

முத்தூர் அருகே கீழ்பவானி பாசன கால்வாயில் முறிந்து விழுந்து கிடக்கும் மரத்தை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

திருப்பூர்

முத்தூர் அருகே கீழ்பவானி பாசன கால்வாயில் முறிந்து விழுந்து கிடக்கும் மரத்தை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கீழ்பவானி பாசன பகுதிகள்

முத்தூர், சின்னமுத்தூர், ஊடையம், வேலம்பாளையம், மங்களப்பட்டி, பூமாண்டன் வலசு, வள்ளியரச்சல், ராசாத்தாவலசு, மேட்டுப்பாளையம் ஆகிய வருவாய் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மிகவும் பிரதான தொழில்களாக செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக பவானிசாகர் அணையில் இருந்து ஆண்டு தோறும் ஜனவரி, ஆகஸ்டு மாதங்களில் கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீரை பயன்படுத்தி எண்ணெய் வித்து பயிர் மற்றும் நஞ்சை சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முத்தூர் அருகே உள்ள வள்ளியரச்சல் ஊராட்சி கரைவலசு கிராமத்தில் செல்லும் கீழ்பவானி பாசன பிரதான கால்வாயில் பக்கவாட்டு கரையில் வேர்கள் வலுவிழந்த நிலையில் இருந்த 50 ஆண்டு பழமையான ஒரு வேலா மரம் கடந்த வாரம் வீசிய காற்றில் வேரோடு முறிந்து கால்வாயின் நடுவில் சாய்ந்த நிலையில் உள்ளே விழுந்து கிடக்கிறது.

கால்வாயில் தேங்கும் தண்ணீர்

இந்த வேலா மரம் கீழ்பவானி பாசன கால்வாயின் நடுப்பகுதியில் விழுந்து கிடப்பதால் பவானிசாகர் அணையில் இருந்து வருகிற ஆகஸ்டு மாதம் நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் போது முறிந்து கிடக்கும் மரத்தினால் வரும் தண்ணீர் அப்படியே தேங்கி மேலே எழும்பி சுற்றுவட்டார பகுதிகளில் புகுந்து விடும் அபாயம் உள்ளது. மேலும் கீழ்பவானி பாசன கால்வாயில் தொடர்ந்து கடைமடை பகுதி வரை தண்ணீர் சீராக செல்வதில் தடை, தாமதம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் துரித நடவடிக்கை மேற்கொண்டு கரைவலசு கிராமத்தில் கீழ்பவானி பாசன கால்வாயில் நடுவில் முறிந்து விழுந்து கிடக்கும் வேலா மரத்தினை வெட்டி அகற்றி அப்புறப்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Related Tags :
Next Story