திருச்சி ரைபிள் கிளப்பில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி-24-ந்தேதி நடக்கிறது


திருச்சி ரைபிள் கிளப்பில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி-24-ந்தேதி நடக்கிறது
x

திருச்சி ரைபிள் கிளப்பில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி வருகிற 24-ந்தேதி நடக்கிறது.

திருச்சி

துப்பாக்கி சுடுதளம்

திருச்சி கே.கே.நகர் மாநகர ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருச்சி மாநகர ரைபிள் கிளப் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

திருச்சி மாநகர ரைபிள் கிளப்பில் மொத்தம் 215 நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களும் உள்ளனர். மேற்படி ரைபிள் கிளப்பில் 50 மீட்டர் தூரத்தில் ஒரு சுடு தளமும், 25 மீட்டர் தூரத்தில் ஒரு சுடுதளமும், 10 மீட்டர் தூரத்தில் 3 சுடுதளம் மற்றும் உடற்பயிற்சி கூடமும் உள்ளது.

1,500 வீரர்கள்

இந்த ரைபிள் கிளப்பில் வருகிற 24-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை மாநில அளவிலான 47-வது துப்பாக்கி சுடும் போட்டிகள் திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மாநகர ரைபிள் கிளப்பில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் பங்கேற்க உள்ளனர்.

இந்த போட்டி தொடர்பான அறிவிப்பை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், ரைபிள் கிளப் தலைவர் ஆகியோர் வெளியிட்டனர். அப்போது திருச்சி ரைபிள் கிளப் செயலாளர் செந்தூர்செல்வன் மற்றும் பொருளாளர் சிராஜீதின் ஆகியோர் உடனிருந்தனர். மேலும், துப்பாக்கி சுடும் போட்டிகள் மற்றும் அதற்கான தகுதிகள், பயிற்சிகள் மற்றும் மாநில, தேசிய சர்வதேச அளவிலான பல்வேறு போட்டிகள் குறித்த கையேடு ஒன்றும் போட்டிகள் நடைபெறும் சமயத்தில் வெளியிடப்படும் என அதிகாரிகள் அறிவித்தார்கள். மேலும் விவரங்களுக்கு 90920 27373 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்தார்.


Next Story