செயற்கைக்கோளின் மென்பொருள் தயாரித்த திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகள்-அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் வாழ்த்து


செயற்கைக்கோளின் மென்பொருள் தயாரித்த திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகள்-அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் வாழ்த்து
x

நாளை மறுநாள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் செயற்கைக்கோள் மென்பொருள் தயாரித்த திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகள் 10 பேரை நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் வாழ்த்தினார்

மதுரை

திருமங்கலம்

நாளை மறுநாள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் செயற்கைக்கோள் மென்பொருள் தயாரித்த திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகள் 10 பேரை நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் வாழ்த்தினார்.

எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்

75-வது சுதந்திர தினத்தையொட்டி இஸ்ரோ சார்பில் எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் 7-ந் தேதி (நாளை மறுநாள்) விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான கவுன்ட்டவுன் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ மையத்தில் தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் இதற்கான செயற்கைக்கோள் தயாரிக்க இஸ்ரோ புதிய முயற்சியை கையாண்டது. அதில் நாடு முழுவதும் உள்ள 75 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. ஒவ்வொரு பள்ளியிலும் 10 மாணவிகளை கொண்டு செயற்கைக்கோளுக்கான மென் பொருள்கள் தயாரிப்பது என முடிவு செய்யப்பட்டது. கடந்த 4 மாதங்களாக இந்த பணி நடைபெற்றது.

திருமங்கலம் பள்ளி மாணவிகள்

இதில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பத்மினி, ஜெப்ரின் இருதயா, ஹரி வைஷ்ணவி, கவுரி, பிருந்தா, அத்ஷா ராணி, பவதாரணி, ஸ்வேதா, ஏஞ்சல், யசோதா தேவி ஆகிய 10 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இஸ்ரோ சார்பில் மென்பொருள் தயாரிப்புக்கான தொழில்நுட்ப உதவி அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மாணவிகள் செயற்கைக்கோளில் பயன்படுத்தப்படும் ஆர்டினோ ஐ.இ.டி. என்ற மென்பொருள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி மூலமாக இஸ்ரோ உதவியது.

ஸ்ரீஹரிகோட்டா செல்கின்றனர்

இதையடுத்து மாணவிகள் இந்த மென்பொருளை தயார் செய்து அனுப்பினர். திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகள் தயாரித்த இந்த மென்பொருள் உயரமான வான்வெளி, தட்பவெட்பம், ஈரப்பதம் ஆகியவற்றில் எவ்வாறு இயங்கும் என்பது தொடர்பானது. நாடு முழுவதும் 75 பள்ளிகளில் இருந்தும் அனுப்பி வைக்கப்பட்ட மென்பொருட்களை கொண்டு, நாளை மறுநாள் எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செயற்கைக்கோள் விண்ணுக்கு அனுப்பப்படுகிறது.

இந்த நிகழ்வில் பங்கேற்க திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மாணவிகள் 10 பேரும் நாளை திருமங்கலத்தில் இருந்து சென்னை சென்று அங்கிருந்து ஸ்ரீஹரிகோட்டா செல்கின்றனர்.

அமைச்சர் சந்திப்பு

இந்தநிலையில் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று திடீரென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வந்தார். செயற்கைக்கோள் மென்பொருள் தயாரித்த திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

மேலும் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினார்.

இதுதொடர்பாக சாதனை மாணவிகள் கூறும்போது, இந்தியா முழுவதும் 75 பள்ளி மாணவிகள் தயார் செய்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. அதற்கான மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டது வாழ்வில் மறக்க முடியாத ஒன்று. இதற்காக கடந்த 4 மாதமாக உழைத்தோம். நாங்கள் தயாரித்த மென்பொருள் செயற்கைக்கோளில் பொருத்தப்படுவதை நினைக்கையில் பெருமையாக உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர். இதே போல் மாணவிகளை, பள்ளிக்கூட ஆசிரியர்கள், சக மாணவிகளும் வாழ்த்தினர்.


Next Story