மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; தந்தை-மகன் சாவு


அன்னவாசல் அருகே பெண் பார்க்க சென்ற போது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தந்தை-மகன் பலியாகினர்.

புதுக்கோட்டை

பெண் பார்க்க...

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே கடம்பராயன்பட்டி உசிலம்பட்டியை சேர்ந்தவர் பழனியாண்டி (வயது 60). இவரது மகன் சந்தியகுமார் (30). சமையல் கலைஞர்கள். சந்தியகுமாருக்கு பெண் பார்ப்பதற்காக இவர்கள் இருவரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உசிலம்பட்டியில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

அப்போது இலுப்பூர் மேட்டுச்சாலையில் வந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

படுகாயம்

இதில் தந்தை-மகன் ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதுகுறித்து இலுப்பூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய வாகனம் டிப்பர் லாரி என்பதும், அந்த லாரி திருநல்லூர் கலர்பட்டியை சேர்ந்த சரவணன் (37) என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரிய வந்தது.

தந்தை-மகன் சாவு

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த தந்தையும், மகனும் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். பெண் பார்க்க சென்ற தந்தை-மகன் இருவரும் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story