டிடிஎப் வாசனின் பைக்கை எரித்து விடலாம் - ஐகோர்ட்டு நீதிபதி காட்டம்


டிடிஎப் வாசனின் பைக்கை எரித்து விடலாம் - ஐகோர்ட்டு நீதிபதி காட்டம்
x
தினத்தந்தி 5 Oct 2023 6:03 AM GMT (Updated: 5 Oct 2023 6:08 AM GMT)

டிடிஎப் வாசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

காஞ்சீபுரம் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் விபத்து ஏற்படுத்தி தனக்குத்தானே காயம் ஏற்படுத்தி கொண்ட வழக்கில் பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசன் எனும் வைகுண்ட வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடந்த 19-ந்தேதி பாலுச்செட்டி சத்திரம் போலீசார் கைது செய்து காஞ்சீபுரம் நீதித்துறை நடுவர் கோர்ட்டு எண் 1-ல் ஆஜர் படுத்தி தொடர்ந்து நீதிபதி உத்தரவின் பேரில் நேற்று வரை கோர்ட்டு காவலில் வைக்கப்பட்டார்.

புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் டி.டி.எப். வாசன் கையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டி.டி.எப். வாசனுக்கு கோர்ட்டு காவல் நேற்று முடிவடைந்த நிலையில் ஏற்கனவே காஞ்சீபுரம் மாவட்ட அமர்வு கோர்ட்டு எண் 2-ல் 3 முறை ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று 4-வது முறையாக பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசனுக்கு ஜாமீன் கேட்டு காஞ்சீபுரம் மாவட்ட அமர்வு கோர்ட்டில் டி.டி.எப். வாசனுடைய வக்கீல் மனு செய்திருந்தார். காஞ்சீபுரம் நீதித்துறை நடுவர் கோர்ட்டு எண் 1-ல் டி.டி.எப். வாசனை போலீசார் ஆஜர் படுத்த வேண்டிய நிலையில், காணொலி காட்சி மூலமாக டி.டி.எப். வாசனை பாலுசெட்டி சத்திரம் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய வழக்கில் யூடியூபர் டி.டி.எப். வாசனுக்கு வருகிற 16-ந் தேதி வரை 14 நாட்களுக்கு கோர்ட்டு காவலை நீட்டித்து காஞ்சீபுரம் நீதித்துறை நடுவர் கோர்ட்டு எண்- 1 நீதிபதி இனிய கருணாகரன் உத்தரவு பிறப்பித்தார். இதனைத்தொடர்ந்து காஞ்சீபுரம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை டி.டி.எப். வாசனின் வக்கீல்கள் வாபஸ் பெற்றனர்.

இதையடுத்து வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கோரி யூடியூபர் டிடிஎப் வாசன் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டிடிஎப் வாசன் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக் வைத்துள்ளார். விபத்தின்போது 3 லட்சம் மதிப்புள்ள பாதுகாப்பு ஆடை அணிந்ததால் அவர் உயிர் தப்பியுள்ளார்; யூடியூப் சேனலில் டிடிஎப் வாசனை 45 லட்சம் சிறார்கள் பின்தொடர்ந்து தவறான வழிக்கு செல்கின்றனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை கேட்ட நீதிபதி, விளம்பரத்திற்காக இதுபோன்ற செயலில் ஈடுபடும் டிடிஎப் வாசனின் யூடியூப் சேனலை மூடிவிட வேண்டும் என்றும் அவரது பைக்கை எரித்து விடலாம் என காட்டமாக கூறி டிடிஎப் வாசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் வாசனுக்கு சிறையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.


Next Story