சிவன் கோவில் கும்பாபிஷேக திருப்பணி தீவிரம்


சிவன் கோவில் கும்பாபிஷேக திருப்பணி தீவிரம்
x
தினத்தந்தி 12 May 2023 6:45 PM GMT (Updated: 12 May 2023 6:46 PM GMT)

சிவகாசி சிவன் கோவில் கும்பாபிஷேக திருப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் பணிகள் முடித்து கும்பாபிஷேக தேதியை திருப்பணிக்குழுவினர் அறிவிக்க உள்ளனர்.

விருதுநகர்

சிவகாசி

சிவகாசி சிவன் கோவில் கும்பாபிஷேக திருப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் பணிகள் முடித்து கும்பாபிஷேக தேதியை திருப்பணிக்குழுவினர் அறிவிக்க உள்ளனர்.

கும்பாபிஷேக பணிகள்

சிவகாசி நகரின் மையப்பகுதியில் பல நூற்றாண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட விஸ்வநாதசுவாமி கோவில் என்ற சிவன் கோவில் உள்ளது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் கும்பாபிஷேம் நடந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த இருந்த நிலையில் கொரோனா பாதிப்பால் கும்பாபிஷேக பணி தொடங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் இது குறித்த செய்தி தினத்தந்தியில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து கோவில் நிர்வாகத்தினர் மற்றும் திருப்பணி குழுவினர் ஆலோசனை கூட்டம் நடத்தி கும்பாபிஷேக பணிகளை உடனே தொடங்க முடிவு செய்யப்பட்டது.

கும்பாபிஷேகத்துக்கு முன்பாக சாமி சன்னதி, அம்பாள் சன்னதி ஆகிய பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ஓடுகளை பழுதுபார்த்து புதுப்பிக்கவும், சுவாமி, அம்பாள் சன்னதி மற்றும் மூலவர் விமானம் ஆகியவற்றில் பஞ்சவர்ணம் பூசுதல், திருக்கல்யாண மண்டபம் சிமெண்டு கூரைகளை அகற்றிவிட்டு கான்கிரீட் கட்டிடம் அமைப்பது, அன்னதானம் கூடம் கட்டுதல், கோவில் முழுவதும் உள்ள கல்தூண்களில் அடித்துள்ள வண்ண பெயிண்ட்டுகளை நீக்கி விட்டு புதுப்பிக்கவும், கோவிலின் உள்பகுதியில் சுமார் 25 ஆயிரம் சதுரஅடிக்கு கருங்கல் தளம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

வர்ணம் பூசுதல்

இதே போல் கோவில் கோபுரம் மற்றும் சுற்றுச்சுவர்களை பராமரித்து புதிய வர்ணம் பூசுதல், பழுதடைந்த மின் விளக்குகளை மாற்றி புதிய மின் விளக்குகள் பொருத்துதல், சுவாமி, அம்பாள் சன்னதி வாசல்களில் பித்தளை தகடுகள் பதிக்கும் பணி, அன்னதான மண்டபம் எதிரில் உள்ள காலி இடத்தில் கழிப்பறை கட்டுதல், தெப்பக்குளம் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் பல லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதற்கு தேவையான நிதிகள் பக்தர்கள் மற்றும் தொழிலதிபர்கள் தானாக முன் வந்து செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பராமரிப்பு பணிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடை பெற்று வருகிறது. இதனை திருப்பணி குழுவினர் கண்காணித்து உரிய ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.

பக்தர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் திருப்பணிகளை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story