தூத்துக்குடியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்:விவசாயிகள் கோரிக்கை


தினத்தந்தி 31 Aug 2023 6:45 PM GMT (Updated: 31 Aug 2023 6:46 PM GMT)

தூத்துக்குடியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி

தண்ணீர் இல்லாமல் வாழைகள் கருகிவிட்ட நிலையில், தூத்துக்குடியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.

குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், உதவி கலெக்டர் கவுரவ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வறட்சி மாவட்டமாக.

கூட்டத்தில் விவசாயிகல் பேசுகையில், தாமிரபரணி ஆற்றில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலையில், மாவட்ட கலெக்டரின் உத்தரவை மீறி, விவசாயிகளிடம் தவறான தகவலை தெரிவித்து மருதூர் அணைக்கட்டில் இருந்து குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தண்ணீரை திறந்துவிட்டு உள்ளார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 2021- 2022, 2022- 2023-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் தண்ணீர் இன்றி வாழைகள் கருகி விட்டன. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். உடன்குடி பகுதியில் கூடுதலாக கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

கழிவுநீர் சுத்திகரிப்பு

இதற்கு பதில் அளித்து கலெக்டர் பேசும் போது, இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. தாமிரபரணி ஆற்றில் சீவலப்பேரி, வல்லநாடு, பொன்னன்குறிச்சி, ஸ்ரீவைகுண்டம், குரங்கணி, வாழவல்லான் உள்ளிட்ட இடங்களில் உறைகிணறுகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு இந்த உறைகிணறுகளுக்கு கூட தண்ணீர் வராத அளவுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே, உறைகிணறு பகுதிகளில் பொக்லைன் மூலம் கால்வாய் தோண்டி தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளித்து வருகிறோம்.

நீர் மேலாண்மை திட்டத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை முதல்கட்டமாக ஸ்பிக் நிறுவனத்துக்கு வழங்கி வருகிறோம். அனல்மின் நிலையத்துக்கும் அந்த தண்ணீரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. டிசிடபிள்யூ நிறுவனத்துக்கு திருச்செந்தூர் நகராட்சியில் கழிவுநீரை சுத்திகரித்து வழங்க ஏற்பாடு செய்யப்படும், என்றார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பாலசுப்பிரமணியன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மார்ட்டின் ராணி, தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், கோரம்பள்ளம் வடிநில கோட்ட செயற்பொறியாளர் வசந்தி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முத்துகுமாரசாமி மற்றும் உதவி கலெக்டர்கள் கிறிஸ்டிபாய் (கோவில்பட்டி), குருச்சந்திரன் (திருச்செந்தூர்) அனைத்து துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

-------------

பாக்ஸ் மேட்டர்

------------------

விவசாயிகளிடம் நகை ஒப்படைக்கப்படும்

கூட்டத்தில் கலெக்டர் மேலும் கூறுகையில், குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முறைகேடு குறித்து தொடர்விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை முடிந்ததும் வேறு வங்கிகளில் மோசடியாக அடமானம் வைக்கப்பட்டுள்ள நகைகள் மீட்கப்பட்டு விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படும். அதுபோல விவசாயிகளின் முதலீடுகளை திரும்ப வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும், என்று கூறினார்.


Next Story