தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில்சூரிய மின் உற்பத்தி ஆலையில் சோதனை ஓட்டம்


தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில்சூரிய மின் உற்பத்தி ஆலையில் சோதனை ஓட்டம்
x
தினத்தந்தி 6 Sep 2023 6:45 PM GMT (Updated: 6 Sep 2023 6:45 PM GMT)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் சூரிய மின் உற்பத்தி ஆலையில் சோதனை ஓட்டம் ஆய்வு செய்யப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் சூரிய மின் உற்பத்தி ஆலையில் சோதனை ஓட்டம் நடந்தது. இதனை மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சக செயலாளர் தா.கி.ராமச்சந்திரன் ஆய்வு செயதார்.

திறப்பு விழா

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆஸ்பத்திரியில் கட்டப்பட்ட மருத்துவ அறைகள், மருந்தகம், துறைமுக பகுதியில் அமைக்கப்பட்ட எலக்ட்ரிக் கார்களுக்கான சார்ஜிங் நிலையங்கள், புதுப்பிக்கப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அலுவலகம், துறைமுக பள்ளிக்கூடத்தில் கட்டப்பட்ட 7 புதிய அறைகள் திறப்பு விழா நேற்று நடந்தது.

விழாவுக்கு வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் (பொறுப்பு) பிமல்குமார் ஜா தலைமை தாங்கினார். மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சக செயலாளர் தா.கி.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிறைவுற்ற பணிகளை திறந்து வைத்தார். தொடர்ந்து துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளையும் ஆய்வு செய்தார்.

சூரிய மின் உற்பத்தி

அதன்படி துறைமுக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 5 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி ஆலை மற்றும் 2 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி ஆகியவற்றில் சோதனை அடிப்படையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை செயலாளர் தா.கி.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் துறைமுக உபயோகிப்பாளர்களுடன், துறைமுகத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் துறைமுக அதிகாரிகள், துறைமுக உபயோகிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story