தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் விளையாட்டு விழா


தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் விளையாட்டு விழா
x
தினத்தந்தி 29 Jun 2023 6:45 PM GMT (Updated: 30 Jun 2023 9:07 AM GMT)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விளையாட்டு விழா நடந்தது. விழாவுக்கு கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) ந.வ.சுஜாத்குமார் தலைமை தாங்கி, கல்லூரி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, விளையாட்டு விழாவை தொடங்கி வைத்தார். விளையாட்டுச் செயலாளர் பா.பார்த்திபன் மற்றும் உதவி உடற்கல்வி இயக்குநர், நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் தடதள வீரர், விராங்கணைகள் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து விளையாட்டு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து 25-க்கும் மேற்பட்ட தடகள போட்டிகள் நடத்தப்பட்டதில் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்ர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். சிறப்பு விளையாட்டு போட்டியாக ஆசிரியர்கள் - மாணவர்கள் இடையே கயிறு இழுக்கும் போட்டி, கைப்பந்து போட்டி ஆகியவை நடத்தப்பட்டன. அதேபோல் ஆசிரியைகள் - மாணவிகள் இடையே வட்டு எறிதல் போட்டி நடத்தப்பட்டது.

மாலையில் நடந்த நிறைவு விழாவில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். சிறந்த அணி வகுப்புக்கான பரிசை இளங்கலை மீன்வள அறிவியல் 2-ம் ஆண்டு மாணவர்கள் தட்டிச் சென்றனர். தடகள போட்டியில் ஆண்களுக்கான தனிநபர் சேம்பியன்ஷிப் 2-ம் ஆண்டு மாணவர் ஆர்.ரோகன் மற்றும் பெண்களுக்கான தனிநபர் சேம்பியன்ஷிப் டி. வசிகா ஆகியோர் தட்டிச்சென்றனர். ஒட்டு மொத்த சேம்பியன் பட்டத்தை இளங்கலை மீன்வள அறிவியல் முதலாம் ஆண்டு மாணவர்கள் பெற்றனர். முடிவில் மாணவர் சங்க விளையாட்டுச் செயலாளர் கே.வல்லரசு நன்றி கூறினார்.


Next Story