இறுமாப்பு வேண்டாம்...டுடோரியல் ஒன்றும் கேவலமான இடமல்ல - வெங்கடேசன் எம்.பிக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதில்...!


இறுமாப்பு வேண்டாம்...டுடோரியல் ஒன்றும் கேவலமான இடமல்ல - வெங்கடேசன் எம்.பிக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதில்...!
x

கவர்னர் ஆவதற்கும் பல சிறப்பு தகுதிகள் வேண்டும், அதைப்போன்ற தகுதிகளை தாங்கள் பெறப்போவதில்லை, இறுமாப்பு வேண்டாம் என கூறியுள்ளார்.

சென்னை,

தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கோவையில் சில நாட்களுக்கு முன்னர் பேசும் போது,

கவர்னர்கள், ஜனாதிபதி, உள்துறை அமைச்சகத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தமிழக மக்கள் எங்களை போன்ற நிர்வாக திறன் உள்ளவர்களையும், எங்கள் போன்ற திறமையானவர்களையும் அங்கீகரிக்கவில்லை. ஆனால் மத்திய அரசு எங்களது திறமையை அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.

தமிழக மக்கள் எங்களை அடையாளம் கண்டு இருந்தால் நாங்கள் எம்.பிக்கள் ஆகி பாராளுமன்றம் செல்வோம். மத்திய மந்திரிகள் ஆவோம். ஆனால் தோற்கடிக்கப்பட்டதால், எங்களின் திறமையை அறிந்த மத்திய அரசு, அதனை வீணடிக்க வேண்டாம் என கருதி கவர்னர்களாக ஆக்கி வருகிறது.

எங்களைப் போன்ற திறமை மிக்கவர்களையும் மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்பது எனது கோரிக்கையாக வைக்கிறேன். இதை நான் சொன்னாலும் இதுகுறித்தும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வரக்கூடும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் அவர் கூறியதற்கு பதில் அளிக்கும் விதமாக வெங்கடேசன் எம்.பி தனது டுவிட்டர் பக்கத்தில்,

ராஜ்பவன்கள் எல்லாம் பெயிலானவர்கள் படிக்கிற டுடோரியல் கல்லூரிகள் என்கிறீர்களா தமிழிசை அவர்களே. பரிட்சையில் பெயில் ஆன பிறகு பிரதமர் பாஸ் போட்டு விட்டார் எனில் அது போலிச் சான்றிதழ் இல்லையா? என கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில்ல் வெங்கடேசன் எம்.பிக்கு பதில் அளிக்கும் விதமாக தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

ராஜ்பவன்கள் டுடோரியல் ஆக உள்ளது என்று வெங்கடேசன் சொல்கிறார்....டுடோரியல் ஒன்றும் கேவலமான இடமல்ல...அதுவும் கல்வி பயிலும் புனிதமான இடம் தான்... டுடோரியலில் படிப்பவர்கள் கூட படித்து அறிவாற்றல் பெற்று தேர்வாகிறார்கள் -

தங்களைப் போல அறிவாலய வாசலில் நின்று பெற்றது அல்ல....

தேர்தல் வெற்றி மட்டுமே ஒருவருக்கு அங்கீகாரம் கிடையாது... ராஜ்பவன்கள் பயிற்சி பட்டறைகளாக இருக்கலாம்... அரண்மனை வாரிசுகளை உருவாக்கும் இடமாக இல்லை என்பதில் பெருமையே....நேற்று வென்றவர்கள் நாளை தோற்கலாம்...நேற்று தோற்றவர்கள் நாளை வெல்லலாம்...இறுமாப்பு வேண்டாம்...

ஆளுநர் ஆவதற்கும் பல சிறப்பு தகுதிகள் வேண்டும்...அதைப்போன்ற தகுதிகளை தாங்கள் பெறப்போவதில்லை... மறுபடியும் சொல்கிறேன் இறுமாப்பு வேண்டாம்....

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story