இளம்பெண் மீது திராவகம் வீச்சு பெண் உள்பட 2 பேர் கைது


இளம்பெண் மீது திராவகம் வீச்சு பெண் உள்பட 2 பேர் கைது
x

இளம்பெண் மீது திராவகம் வீசிய பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

மதுரவாயலை சேர்ந்தவர் லேகா (வயது 30). இவரது வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டு லேகா கதவை திறந்தார். அப்போது வீட்டின் வெளியே ஆணுடன் நின்ற பெண் ஒருவர், கையில் இருந்த கழிவறையை சுத்தம் செய்யும் திராவகத்தை லேகா மீது ஊற்றினார்.

இதில் லேகாவுக்கும், அருகில் நின்றிருந்த அவரது தாயாருக்கும் முகத்தில் திராவகம் பட்டதால் முகம் வெந்தது. வலியால் துடித்த தாய்-மகள் இருவரும் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2 பேர் கைது

இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லேகா மீது திராவகம் வீசிய போரூர் மங்களா நகரை சேர்ந்த ஐஸ்வர்யா (37), தீனதயாளன் (36) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்தனர்.

அதில் லேகா, பார்த்திபன் என்பவரை காதலித்து வந்தார். பின்னர் அவரை கைவிட்டுவிட்டு தீனதயாளனை காதலித்தார். தற்போது அவருடனான தொடர்பையும் நிறுத்தி விட்டார்.

பழிவாங்க திட்டம்

இதற்கிடையில் லேகாவின் முன்னாள் காதலன் பார்த்திபனை, ஐஸ்வர்யா காதலித்து வருகிறார். லேகாவின் பிரிவை தாங்க முடியாத முன்னாள் காதலன் தீனதயாளன், அவரை பழிவாங்க திட்டமிட்டு, ஐஸ்வர்யாவுடன் பழகினார். அப்போது, லேகா இன்னும் உனது காதலன் பார்த்திபனுடன் பழகுவதாக கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஐஸ்வர்யா, தீனதயாளனை அழைத்துக்கொண்டு லேகா வீட்டுக்கு சென்று கையில் தயாராக கொண்டு சென்ற திராவகத்தை வீசியது தெரிந்தது. கைதான 2 பேரிடமும் போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.


Next Story