ஐகோர்ட்டில் புதிய கூடுதல் நீதிபதிகள் இருவர் பதவியேற்பு


ஐகோர்ட்டில் புதிய கூடுதல் நீதிபதிகள் இருவர் பதவியேற்பு
x

சென்னை ஐகோர்ட்டில் 2 புதிய கூடுதல் நீதிபதிகள் நேற்று பதவி ஏற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்களாக பணியாற்றிவந்த என்.செந்தில்குமார், ஜி.அருள்முருகன் ஆகியோரை ஐகோர்ட்டு புதிய கூடுதல் நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் இருவரும் சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகளாக நேற்று பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

இரு புதிய நீதிபதிகளையும் வரவேற்று பேசிய அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், 'புதிய நீதிபதிகள் இருவரும் சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து ஐகோர்ட்டு நீதிபதிகளாக பொறுப்பேற்றுள்ளனர். இதன் மூலம் இருவரும் பிற வக்கீல்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றனர்' என்றார்.

அடிப்படை வசதி

அதேபோல இரு நீதிபதிகளையும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் உள்ளிட்ட வக்கீல் சங்கங்களின் நிர்வாகிகள் வரவேற்று பேசினர்.

பி.எஸ்.அமல்ராஜ் பேசும்போது, 'தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கோர்ட்டுகளில் ஆன்லைன் மூலம் மனுக்களை தாக்கல் செய்ய தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்' என்று தலைமை நீதிபதிக்கு கோரிக்கை விடுத்தார்.

அதன்பின்னர் நீதிபதிகள் இருவரும் ஏற்புரை ஆற்றினர். அப்போது, தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ப எந்தவொரு பாரபட்சமும் பார்க்காமல் நீதியை நிலைநாட்ட தமது பணியை செவ்வனே செய்வோம் என்றனர்.

முன்னாள் எம்.எல்.ஏ.

சென்னை ஐகோர்ட்டில் மொத்த நீதிபதி இடங்களின் எண்ணிக்கை 75 ஆகும். 2 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றதன் மூலம் ஐகோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. காலியிடங்கள் 10 ஆக குறைந்துள்ளன.

புதிய நீதிபதி என்.செந்தில்குமார் 1970-ம் ஆண்டு அக்டோபர் 12-ந்தேதி பிறந்தார். இவரது பெற்றோர் நாராயணசாமி-சங்கரவல்லி ஆவர். தந்தை நாராயணசாமி ரெயில்வே பாதுகாப்பு படையில் பணியாற்றினார். தாயார் சங்கரவல்லி என்ற சங்கரிநாராயணன் அச்சரப்பாக்கம் தொகுதியில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையில் தி.மு.க. எம்.எல்.ஏ. வாக பதவி வகித்தவர். சென்னை பெரம்பூரில் பள்ளிப்படிப்பை முடித்த நீதிபதி என்.செந்தில்குமார், சேலம் மத்திய சட்டக்கல்லூரியில் கடந்த 1994-ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்தார். பின்னர் தற்போதைய அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரத்தின் ஜூனியராக பணியைத் தொடங்கினார்.

தலைமை ஆசிரியரின் மகன்

நீதிபதி ஜி.அருள்முருகன் தர்மபுரியைச் சேர்ந்தவர். 1976-ம் ஆண்டு மே 27-ந்தேதி பிறந்தார். இவரது பெற்றோர் கணபதி-நீலாமணி. இவரது தந்தை தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

சேலத்தில் பள்ளிப் படிப்பையும், சேலம் மத்திய சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்துள்ள அருள்முருகன், கடந்த 1999-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்து, ஐகோர்ட்டில் மூத்த வக்கீல் கே.துரைசாமியின் ஜூனியராக பணியாற்றியவர்.

சென்னை ஐகோர்ட்டு புதிய கூடுதல் நீதிபதிகள் என்.செந்தில் குமார், ஜி.அருள்முருகன்.


Next Story