என்ஜினீயர் வீட்டில் இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிப்பு


என்ஜினீயர் வீட்டில் இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிப்பு
x

என்ஜினீயர் வீட்டில் இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

திருச்சி

சமயபுரம்:

வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன

மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகம் பின்புறம் உள்ள நேரு நகரை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 40). இவர் மலேசியாவில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மலேசியாவில் இருந்து மணிகண்டன் ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அவரது மனைவி மகாலட்சுமி, மகன்கள் நிரஞ்சன், சரவன் மற்றும் மணிகண்டனின் தாய் ஆகியோருடன் அவர் சாப்பிட்டுவிட்டு, அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தனர்.

இரவு 12 மணியளவில் வீட்டின் முன்பு சத்தம் கேட்டு ஹாலில் படுத்திருந்த மணிகண்டனின் தாய் எழுந்து வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். இதையடுத்து மணிகண்டன் உள்ளிட்டோர் எழுந்து வந்து வாகனங்கள் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

போலீசார் விசாரணை

இது குறித்து, மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதே பகுதியில் 3 நாட்களுக்கு முன்பு ஒரு வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story