குழந்தை இறந்த துக்கம் தாங்காமல் தாய் தூக்குப்போட்டு தற்கொலை


குழந்தை இறந்த துக்கம் தாங்காமல் தாய் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 27 May 2023 6:45 PM GMT (Updated: 27 May 2023 6:46 PM GMT)

குழந்தை இறந்த துக்கம் தாங்காமல் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

குழந்தை இறந்த துக்கம் தாங்காமல் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நோயால் அவதி

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி ஊராட்சி குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஐஸ்வர்யா (வயது 27). இவர்களது மகள் ஜெஷ்விதா (வயது 4), கடந்த 8 மாதமாக ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தாள்.

ஜெஷ்விதாவுக்கு சென்னை, பெங்களூரு நகரில் பல்வேறு தனியார் மருத்துவமனையில் ரூ.25 லட்சம் செலவு செய்து சிகிச்சை அளித்தும் நோய் குணமாகவில்லை.

கடந்த வியாழக்கிழமை தர்மபுரி அரசு மருத்துவமனையில் ஜெஷ்விதா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாள். தகவல் அறிந்த ராமன் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பி வந்தார். இந்த நிலையில் ஜெஷ்விதா சிகிச்சை பலனின்றி இறந்து விட்டாள்.

தற்கொலை

இதனால் பெற்றோர் சோகம் அடைந்தனர். இந்த நிலையில் குழந்தை இறந்த துக்கத்தில் இருந்து வந்த தாய் ஐஸ்வர்யா வாழ்க்கையில் வெறுப்பு அடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார்

அப்போது அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு வந்து ஐஸ்வர்யாவை உடனடியாக கீழே இறக்கி காப்பாற்றினர்.

அப்பொழுது ஐஸ்வர்யா தனது குழந்தை இறந்ததை மனம் ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிவித்தார். இதனால் ஊர் பெரியவர்கள் ஐஸ்வர்யாக்கு ஆறுதல் கூறி சென்றனர். இந்த நிலையில் மீண்டும் நேற்றுமுன்தினம் இரவு அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சோகம்

மேலும் இது குறித்து கணவர் ராமன் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.



Next Story