வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றி பயன்பெறலாம் - அதிகாரி தகவல்


வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றி பயன்பெறலாம் - அதிகாரி தகவல்
x

வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றி பயன்பெறலாம் என வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எல்.சுரேஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் 141 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த கிராம பஞ்சாயத்துகளில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல், நீர்வள ஆதாரங்களை பெருக்குதல், சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைத்தல், வேளாண் விளைப் பொருட்களை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துதல், நுண்ணீர் பாசன முறையை பின்பற்றுதல், வருவாய் துறையின் மூலம் புதிய பட்டா, பட்டா மாறுதல் வழங்குதல், கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிக அளவு பயிர் கடன்கள் வழங்குதல், கால்வாய் பாசன நீர் வழி தடங்களை தூர்வாருதல் போன்ற பணிகள் இந்த திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 141 கிராம பஞ்சாயத்துகளில் வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை வேளாண்மை பொறியியல், உள்பட பல துறைகள் சேர்ந்து ஒருங்கிணைப்பு முனைப்பு இயக்க முகாம்கள் இன்று 19-ந் தேதி மற்றும் பிப்ரவரி மாதம் 2-ந்தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த முகாம்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட செயலாக்கம் மற்றும் அனைத்து துறைகளிலும் உள்ள திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தல், பட்டா மாறுதல் விண்ணப்பம், சிறு, குறு விவசாயிகளுக்கு சான்று வழங்குதல், பயிர் கடன் விண்ணப்பம் பெறுதல், கால்நடை முகாம், கிசான் கடன் அட்டை விண்ணப்பம் பெறுதல் இதர திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் பெறுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளதால் அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story