வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 13 Oct 2023 6:45 PM GMT (Updated: 13 Oct 2023 6:45 PM GMT)

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

திருவாரூர்


வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

உதவித்தொகை திட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன் பெற பதிவு செய்ய, 2023-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி அன்று 5 ஆண்டுகள் முடிவடைந்த, முறையாக பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் தேர்ச்சி பெற்ற, மேல்நிலை வகுப்பு, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் தகுதி உடையவர் ஆவர்.

மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை எழுத படிக்க தெரிந்தவர் முதல் 10-ம் வகுப்பு, மேல்நிலை வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்து 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந் தேதி அன்று ஓராண்டு முடிவடைந்த பதிவுதாரர்கள் தகுதி உடையவர் ஆவர். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமானம் மற்றும் வயதில் உச்சவரம்பு ஏதுமில்லை. பதிவுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் பயில்பவராக இருக்க கூடாது.

3 மாதங்களுக்கு ஒரு முறை

இத்தகுதிகளை உள்ளடக்கிய பதிவுதாரர்களுக்கு, தமிழக அரசால் கீழ்கண்டவாறு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பொது பிரிவினருக்கு மாதம் ஒன்றிற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியின்மை எனில் ரூ.200-ம், தேர்ச்சி பெற்றவர் எனில் ரூ.300-ம், மேல்நிலை வகுப்பு தேர்ச்சி எனில் ரூ.400-ம், பட்டப்படிப்பு தேர்ச்சி எனில் ரூ.600-ம் 3 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்பட்டு 3 ஆண்டுகளுக்கு தொடர்புடையவரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதிற்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கு எழுத, படிக்க தெரிந்த மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி எனில் ரூ.600-ம், மேல்நிலை வகுப்பு தேர்ச்சி எனில் ரூ.750-ம், பட்டப்படிப்பு தேர்ச்சி எனில் ரூ.1000-ம், ஒவ்வொரு மாதமும் தொடர்புடையவரின் வங்கி கணக்கில் 10 ஆண்டுகளுக்கு செலுத்தப்படும்.

விண்ணப்பித்து பயன்பெறலாம்

ஏற்கனவே 3 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள் மற்றும் பொறியியல், மருத்துவம், விவசாயம் மற்றும் சட்டம் போன்ற தொழில் சார்ந்த பட்டப் படிப்புகள் முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்க இயலாது.

மேற்குறிப்பிட்ட தகுதியுடைய பதிவுதாரர்கள் வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, அசல் பள்ளி, கல்லூரி மாற்றுச்சான்றிதழ் மற்றும் அசல் குடும்ப அட்டை ஆகியவற்றுடன் திருவாரூர் மன்னை சாலை, விளமல் என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்றோ அல்லது https://tnvelaivaaippu.gov.in/download.html என்ற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அடுத்த மாதம் (நவம்பர்) 30-ந் தேதிக்குள் சமர்ப்பித்து பயனடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story