பள்ளி மாணவர்களுக்கு சீருடை, காலணிகளை உடனடியாக வழங்க வேண்டும் -அண்ணாமலை வலியுறுத்தல்


பள்ளி மாணவர்களுக்கு சீருடை, காலணிகளை உடனடியாக வழங்க வேண்டும் -அண்ணாமலை வலியுறுத்தல்
x

தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு சீருடை, காலணிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய புத்தக பை மற்றும் காலணிகள் இன்னும் வழங்கப்படவில்லை என்றும், மாணவர்களுக்கான சீருடை ஒன்று மட்டுமே வழங்கியிருப்பதால் தினமும் சீருடை அணிய முடியாமல் மாணவர்கள் பள்ளிக்கு வரும் நிலையில் இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. மேலும் ஒரு சில பள்ளிகளில் வழங்கப்பட்ட காலணிகள் மாணவர்களுக்கு பொருந்தும் அளவிலும் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் முக்கிய பணிகளில் ஒன்றான மாணவர்களுக்கான உபகரணங்கள் குறித்த நேரத்தில் வழங்கப்படுவதை ஏன் உறுதி செய்யவில்லை? கடந்த ஆண்டும் இது போல காலதாமதமாக, ஆண்டு இறுதியில் உபகரணங்கள் வழங்கப்பட்டதால், அவற்றை மாணவர்கள் பயன்படுத்த முடியாமலேயே போய்விட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஆண்டாவது, பாடநூல் கழகமும், பள்ளி கல்வித்துறையும் மீண்டும் அதே குற்றச்சாட்டு எழாமல் தவிர்த்திருக்க வேண்டும். ஆனால் அமைச்சருக்கும், பாடநூல் கழகத்துக்கும் மாணவர்களின் நலனை விட கோபாலபுர குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவதே முக்கியமாக போய்விட்டது.

நிதி ஒதுக்க மனம் வரவில்லை

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளை கொண்டாட அமைச்சர்கள் தலைமையில் 12 கமிட்டி அமைத்து, ஒவ்வொரு கமிட்டிக்கும் ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி செலவிடப்படுவதாக தெரிய வந்துள்ளது. பெருமளவில் நிதி இதற்கு ஒதுக்கப்படுவதால், மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உபகரணங்களை வழங்காமல் அலைக்கழிக்கிறதா தமிழக அரசு? அரசு பணத்தை எதற்கு செலவிட வேண்டும் என்பதையே இவர்கள் உணரவில்லை.

ஆட்சிக்கு வந்ததும், 10 ஆயிரம் சிதிலம் அடைந்த அரசு பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என்று அறிவித்தார். பள்ளி கல்வித் துறை அமைச்சரிடம், இந்த புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளனவா? என்று ஒரு ஆண்டுக்கும் மேலாக கேட்டும் இன்னும் பதில் வரவில்லை. எது எதற்கோ, ரூ.80 கோடி, ரூ.100 கோடி என வீணாக நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள். ஆனால் நாட்டின் எதிர்கால தூண்களான மாணவர்கள் நலனுக்கு நிதி ஒதுக்க தி.மு.க. அரசுக்கு மனம் வரவில்லை.

உடனடியாக வழங்க வேண்டும்

மாணவர்களுக்கு சீருடை, காலணிகள், புத்தக பை உள்ளிட்டவற்றை குறித்த நேரத்தில் வழங்குவது தமிழக அரசின் கடமை என்பதை, அமைச்சரும் பாடநூல் கழகமும் உணர்ந்திருக்க வேண்டும்.

கோபாலபுர குடும்பத்தின் புகழ்பாடும் கடமைகள் காத்திருக்கலாம். மாணவர்களை காக்க வைப்பதை அனுமதிக்க முடியாது. உடனடியாக, தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கான சீருடை, காலணிகள் உள்ளிட்டவை உடனடியாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story