சரணடையாத அ.தி.மு.க. கவுன்சிலருக்கு பிடிவாரண்டு


சரணடையாத அ.தி.மு.க. கவுன்சிலருக்கு பிடிவாரண்டு
x
தினத்தந்தி 9 Aug 2023 6:45 PM GMT (Updated: 9 Aug 2023 6:46 PM GMT)

சரணடையாத அ.தி.மு.க. கவுன்சிலருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 9-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் பரமக்குடி 3-வது வார்டு கவுன்சிலரும், அ.தி.மு.க. முன்னாள் நகர் அவைத்தலைவருமான சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், தனியார் ஜவுளி நிறுவன உரிமையாளர் ராஜாமுகமது, புரோக்கர்களாக இருந்து செயல்பட்ட உமா, கயல்விழி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களில் அ.தி.மு.க. கவுன்சிலர் சிகாமணிக்கு ராமநாதபுரம் மாவட்ட மகிளா கோர்ட்டில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. சிகாமணிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் கீதா மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். விசாரணையின் போது மதுரை ஐகோர்ட்டு நீதிபதி இளங்கோவன், சிகாமணிக்கு கீழ்கோர்ட்டு வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்த மாணவி கூட்டு பலாத்கார வழக்கினை வேறு போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்றி அதிரடியாக உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் மகிளா கோட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. சிகாமணி தவிர மற்ற 4 பேரும் கோர்ட்டில் ஆஜரப்படுத்தப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி கோபிநாத் 4 பேருக்கும் வரும் 23-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டார். மேலும் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததோடு, ஜாமீன் ரத்தான நிலையில் சரணடையாமலும் உள்ள சிகாமணிக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story