தம்பதிக்குள் பிரச்சினை தீரும் வரை; ஒரு குழந்தையை தாயும், இன்னொரு குழந்தையை தந்தையும் பராமரிக்கலாம்


தம்பதிக்குள் பிரச்சினை தீரும் வரை; ஒரு குழந்தையை தாயும், இன்னொரு குழந்தையை தந்தையும் பராமரிக்கலாம்
x

தம்பதிக்குள் பிரச்சினை தீரும் வரை ஒரு குழந்தையை தாயும், இன்னொரு குழந்தையை தந்தையும் பராமரிக்கலாம் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபாதேவி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், நான் எனது பெற்றோர் வீட்டில் 6 வயது மகள், 4 வயது மகனுடன் வசித்து வருகிறேன். இந்தநிலையில் எனது மகளை திடீரென காணவில்லை. அவளை கண்டுபிடித்து ஆஜர்படுத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது கண்ணதாசன் என்பவர் நீதிபதிகள் முன்பு ஆஜராகி, நான் மனுதாரரின் கணவர். என் மகளை அவர்களின் வீட்டில் இருந்து நான்தான் அழைத்து சென்றேன். கடத்திச்செல்லவில்லை. மனைவி, குழந்தைகளுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன். ஆனால் என் மனைவி தரப்பில் ஒத்துழைக்கவில்லை.

இதனால் கடும் மனஉளைச்சலில் உள்ளேன். ஏற்கனவே என் மகனை அழைத்து சென்றது தொடர்பான வழக்கில் வாரத்தில் சில நாட்கள் என் மனைவி வீட்டிற்கு சென்று நான் குழந்தைகளை சந்திக்கலாம் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் குழந்தைகளை நான் சந்திக்க என் மனைவி வீட்டினர் அனுமதிப்பதில்லை என்று கூறி, அழுதார்.

அதற்கு மனுதாரர் வக்கீல் ஆஜராகி, ஏற்கனவே குழந்தைகள் மனுதாரர் வசம் இருக்கட்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது என்றார்.

போலீசாரின் ஆர்வம்

ஆனால் நீதிபதிகள், இவர்களின் மகன் விவகாரத்தில்தான் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மகளை பராமரிப்பது பற்றி ஐகோர்ட்டு உத்தரவிடவில்லை என்றனர்.

மேலும் நீதிபதிகள், எத்தனையோ கடத்தல் சம்பவங்கள் நடக்கின்றன. அவற்றில் எல்லாம் உடனடியாக கடத்தல் வழக்குபதிவு செய்யப்படுவதில்லை. மகளை அவரது தந்தை அழைத்து சென்றதற்காக அவசரம் அவசரமாக கடத்தல் வழக்குப்பதிவு செய்தது ஏற்புடையதல்ல என அதிருப்தி தெரிவித்தனர்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "தாத்தா, பாட்டி, பெற்றோர், குழந்தைகள் என குடும்பமாக வசிப்பதுதான் இந்திய கலாசாரம். ஆனால் ஒருவரின் சொத்துகள், ஜீவனாம்சம் உள்ளிட்டவற்றை சம்பந்தப்பட்டவர்கள் பெற்றுக்கொள்கின்றனர். குழந்தைகளையும் பிரித்துவிட்டு, அந்த நபரை தனிமையில் விட்டுவிடுவது எந்த வகையில் நியாயம்? மனுதாரருடன் அவரது கணவர் சேர்ந்து வாழ்வதற்காக தன் மகளை அழைத்து சென்றதாக கூறுகிறார்.

தந்தையுடன் மகள்

இந்த விவகாரத்தில் சுமூக தீர்வு ஏற்படும் வரை ஒரு குழந்தையை மனுதாரரான தாயும், மற்றொரு குழந்தையை தந்தையும் பராமரிப்பதில் எந்த தவறும் இல்லையே. இதை கடத்தல் சம்பவமாக கருத முடியாது. எனவே தற்சமயம் மனுதாரரின் மகள் அவரது தந்தையின் பராமரிப்பில் இருக்கலாம். தேவைப்பட்டால் கீழ்கோர்ட்டில் முறையீடு செய்து, உரிய பரிகாரம் தேடிக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டு இந்த வழக்கை நீதிபதிகள் முடித்துவைத்தனர்.


Next Story