யு.பி.எஸ்.சி. தேர்வர்கள் ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வு


புதுக்கோட்டையில், யு.பி.எஸ்.சி. தேர்வர்கள் ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வை 529 பேர் எழுதினர்.

புதுக்கோட்டை

யு.பி.எஸ்.சி. தேர்வு

`நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் யு.பி.எஸ்.சி. தேர்வு எழுத தயாராகும் தேர்வர்களுக்கு பயிற்சி வகுப்புடன் தலா ரூ.7,500 வீதம் 10 மாதம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் ஆயிரம் மாணவர்களை தேர்வு செய்து இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தில் பயன்பெற மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர். இந்த நிலையில் இத்திட்டத்தில் உதவித்தொகை பெறுவதற்கான மதிப்பீட்டு தேர்வு நேற்று நடைபெற்றது.

529 பேர் தேர்வு எழுதினர்

புதுக்கோட்டையில் டி.இ.எல்.சி. மேல்நிலைப்பள்ளி, மச்சுவாடி அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி, திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை எழுத 805 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இதில் 529 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 276 பேர் தேர்வு எழுதவரவில்லை. தேர்வர்கள் பலத்த சோதனைக்கு பின் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிவடைந்தது.


Next Story