புதிய பஸ் நிலைய இணைப்புச்சாலை பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தல்


புதிய பஸ் நிலைய இணைப்புச்சாலை பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Aug 2023 6:45 PM GMT (Updated: 24 Aug 2023 5:29 PM GMT)

ராஜபாளையம் புதிய பஸ் நிலையத்திற்கான இணைப்பு சாலை திட்டப்பணிகள் முடங்கியுள்ளதால் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்

ராஜபாளையம்

ராஜபாளையம் புதிய பஸ் நிலையத்திற்கான இணைப்பு சாலை திட்டப்பணிகள் முடங்கியுள்ளதால் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இணைப்பு சாலை திட்டம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கடந்த 2008-ம் ஆண்டு புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டது. திறந்தது முதல் தற்போது வரை பயணிகள் அதிகம் வந்து போகும் ஒரே பஸ் நிலையமாக இருந்தும் இதற்கான இணைப்புச் சாலை திட்டம் என்பது தற்போது வரை முடிவு இல்லாமல் உள்ளது.

இதனால் மதுரையில் இருந்து ராஜபாளையம் வழியாக தென்காசி செல்லும் பஸ்கள் புதிய பஸ் நிலையத்திற்கு சென்று திரும்பும் சாலை குறுகலாக உள்ளதால் சங்கரன்கோவில் முக்கு வழியாக நகருக்குள் செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அதனால் விபத்துக்களும் உயிரிழப்புகளும் அதிகரிப்பது தொடர்கதையாக உள்ளது.

ஆக்கிரமிப்பு

அதனால் ஏற்கனவே சங்கரன்கோவில் சாலையில் இருந்து 60 அடி அகலத்திற்கு ஒப்பந்த சாலை என்ற பெயரில் தென்காசி நெடுஞ்சாலைக்கு இணைப்பு பாதைக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில் சாலையில் இருந்து திருவனந்தபுரம் தெரு வரை சுமார் 900 மீட்டர் தொலைவிற்கு தற்போது சாலை அமைக்க ஆக்கிரமிப்பும் இல்லாமல் உள்ளது. 1250 மீட்டர் தொலைவில் மீதமுள்ள 350 மீட்டர் பாதையில் குடியிருப்புகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை

இந்நிலையில் நகரின் போக்குவரத்திற்கு தீர்வாக இந்த இணைப்பு ஒப்பந்த சாலையை செயல்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரியாதிகுளம் கண்மாய் கரை நில எடுப்பு பணிகளில் நன்செய் விவசாய நிலங்கள் ஏராளமாக குறுக்கிடுவதாலும் கண்மாயில் நீர் வழி மதகு பாதிக்கப்படுவதாலும் அந்த பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இதை கருத்தில் கொண்டு பரிசீலனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story