கோழி தீவனத்தில் கருவாடு, மீன் பயன்பாட்டை குறைக்க வேண்டும்


கோழி தீவனத்தில் கருவாடு, மீன் பயன்பாட்டை குறைக்க வேண்டும்
x
தினத்தந்தி 13 Dec 2022 7:30 PM GMT (Updated: 13 Dec 2022 7:31 PM GMT)

கோழித்தீவனத்தில் கருவாடு, மீன் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நாமக்கல்

கோழித்தீவனத்தில் கருவாடு, மீன் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மழைக்கு வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

அடுத்த 3 நாட்கள் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 14 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை) 6 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 84.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 64.4 டிகிரியாகவும் இருக்கும்.

காற்று மணிக்கு 4 கி.மீ. வேகத்தில் தென்கிழக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைகளில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 90 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 40 சதவீதமாகவும் இருக்கும்.

குடற்புண் ஏற்படும்

சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் கோழிகளில் கிளாஸ்டிரிடியம் பாக்டீரியா மூலம் குடற்புண் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியா கோழி கொட்டகையில் எச்சம், தீவனம் மற்றும் தூசிகள் உள்ள எல்லா இடங்களிலும் பரவி உள்ளது. இது தவிர கோழிகளின் குடலிலும் இக்கிருமிகள் காணப்படுகின்றன. திடீரென தீவனத்தில் ஏற்படும் மாற்றம் அல்லது குடலில் ஏற்படும் சேதாரம் ஆகிய காரணங்களால் கோழிகளில் குடற்புண் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். தற்போது நிலவும் தொடர்மழை காலத்தில் மற்றும் எதிர்வரும் குளிர்காலத்தில் ரத்த கழிச்சல் மற்றும் குடற்புண் நோய்கள் ஆழ்கூளம் முறையில் குறைந்த இடத்தில் அதிக கோழிகளை வளர்க்கும்போது உண்டாக வாய்ப்புகள அதிகம். இந்த நேரங்களில் கோழிகளுக்கு கருவாடு, மீன், கோதுமை போன்ற தீவன பொருட்கள் பயன்படுத்துவதை குறைத்து கொள்ள வேண்டும்.

ரத்தக்கழிச்சல்

தற்போது நிலவும் தொடர்மழை காலத்தில் தீவனத்தில் ஈரப்பதம் அதிகம் காணப்படுவதால் ஈகோலை மற்றும் ரத்தக்கழிச்சலை உண்டாக்கும். எனவே தரமான தீவன மூலப்பொருட்களை மட்டுமே விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். இதுதவிர நாட்டுகோழிகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். தீவனத்தை பரிசோதித்த பின் பயன்படுத்துவது சிறந்தது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story