வி.களத்தூர் இந்து-முஸ்லிம் பிரமுகர்களுக்கு நல்லிணக்க விருந்து


வி.களத்தூர் இந்து-முஸ்லிம் பிரமுகர்களுக்கு நல்லிணக்க விருந்து
x

வி.களத்தூர் இந்து-முஸ்லிம் பிரமுகர்களுக்கு நல்லிணக்க விருந்து நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வி.களத்தூரில் அமைந்துள்ள செல்லியம்மன் கோவில் திருவிழாவில் மத நல்லிணக்கத்தை நிலைநாட்டும் வகையில், இந்து, முஸ்லிம் ஆகிய இரு தரப்பினரிடையே கடந்த 110 ஆண்டுகளாக இருந்த பிரச்சினைகளை நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் இரு தரப்பு மக்களையும் அழைத்து நடத்திய அமைதி பேச்சுவார்த்தையின் அடிப்படையிலும் சுமூக தீர்வு காணப்பட்டது. அதனை தொடர்ந்து இந்து சமய பெரியோர்கள் முன்னிலையில், முஸ்லிம் ஜமாஅத் பெரியோர்கள் ஒத்துழைப்புடன் செல்லியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்வு மத நல்லிணக்கத்தை நிலைநாட்டும் வகையில் அமைந்திருந்தது. கோவில் திருவிழாவிற்கு ஒத்துழைப்பு வழங்கிய முஸ்லிம் பிரமுகர்களுக்கும், திருவிழாவை ஒற்றுமையோடு அமைதியாக நடத்திய இந்து சமய பிரமுகர்களுக்கும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி நேற்று இரவு பெரம்பலூரில் ஒரு உணவகத்தில் மத நல்லிணக்க விருந்து வைத்தார். இதில் வி.களத்தூரை சேர்ந்த இந்து, முஸ்லிம் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும் அவர்கள் போலீஸ் சூப்பிரண்டுடன் கலந்துரையாடி குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்வு காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது.


Next Story