தூத்துக்குடி மாவட்டத்தில் 1,042 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்


தூத்துக்குடி மாவட்டத்தில்  1,042 இடங்களில் கொரோனா  தடுப்பூசி முகாம்
x

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 1,042 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 1,042 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

கொரோனா தடுப்பூசி

கொரோனா தொற்று தமிழகத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனை முழுமையாக கட்டுப்படுத்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. அதன்படி மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று தமிழகம் முழுவதும் 32-வது கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,042 இடங்களில் இந்த சிறப்பு முகாம் நடந்தது. தூத்துக்குடி மாநகராட்சியில் 160 இடங்களிலும், தூத்துக்குடி சுகாதார மாவட்டத்தில் 667 இடங்களிலும், கோவில்பட்டி சுகாதார மாவட்டத்தில் 375 இடங்களிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இது தவிர மருத்துவ பணியாளர்கள் வீடு வீடாக சென்றும் விடுபட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர்.

பூஸ்டர் டோஸ்

இந்த முகாம்களில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி போடப்பட்டது. மேலும் நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை 75 நாட்களுக்கு (செப்டம்பர் 30 வரை) இலவசமாக போட மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

அதன்படி அனைத்து மையங்களிலும் பூஸ்டர் டோஸ் இலவசமாக போடப்பட்டது. 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமாக போட்டுக் கொண்டனர். நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை ஸ்ரீவைகுண்டம், குரும்பூர், திருச்செந்தூர் பகுதிகளில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்செல்வன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story