"அரோகரா" கோஷத்துடன் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்


அரோகரா கோஷத்துடன் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்
x

பழனி முருகன் கோவிலில், வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

திண்டுக்கல்

வைகாசி விசாகம்

தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் அவதரித்த வைகாசி மாத விசாக நட்சத்திர நாள் 'வைகாசி விசாக' திருவிழாவாக அனைத்து முருகன் கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது.

'வசந்த உற்சவம்' என்று வர்ணிக்கப்படும் இந்த திருவிழா, பழனியில் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அந்தவகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் வாஸ்து சாந்திபூஜை, அஸ்திரதேவர் வலம் வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நேற்று காலை பெரியநாயகி அம்மன் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜை, 16 வகை அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.

'அரோகரா' கோஷம்

இதனையடுத்து வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி சப்பரத்தில் உட்பிரகாரம் வலம்வந்து, கொடிக்கட்டு மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் மண்டபத்தில் வைத்து விநாயகர் பூஜை, கொடிமரம், கொடிபடத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, காலை 11.40 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் 'அரோகரா' கோஷம் எழுப்பினர். பின்னர் கொடிமரம், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை காட்டப்பட்டது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பழனி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜசேகர், மணிமாறன், இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ், பழனி கந்தவிலாஸ் உரிமையாளர் செல்வகுமார் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். பூஜை முறைகளை கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணி மற்றும் குருக்கள் செய்தனர்.

தேரோட்டம்

10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை தந்த பல்லக்கிலும், இரவில் தங்கமயில், வெள்ளி காமதேனு, யானை, தங்கக்குதிரை போன்ற வாகனத்திலும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருவுலா காட்சி நடைபெறுகிறது. 6-ம் திருநாளான ஜூன் 1-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அடுத்த நாள் வைகாசி விசாக நாளன்று தேரோட்டம் நடைபெறுகிறது.

விழாவையொட்டி 10 நாட்களும் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாலை 6.30 மணிக்கு மங்கல இசை, பக்தி சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

-------


Next Story