வைகுண்ட ஏகாதசி விழா: தங்கப்பல்லக்கில் பெருமாள் சந்தன மண்டபம் சேரும் வைபவம் - பக்தர்கள் தரிசனம்


வைகுண்ட ஏகாதசி விழா: தங்கப்பல்லக்கில் பெருமாள் சந்தன மண்டபம் சேரும் வைபவம் - பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 23 Dec 2022 1:25 AM GMT (Updated: 23 Dec 2022 1:51 AM GMT)

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் நேற்று தொடங்கியது.

திருச்சி,

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி விழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நேற்று தொடங்கியது.

இதைத்தொடர்ந்து பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கியது. பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளில் தங்கப்பல்லக்கில் காலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 6.30 மணிக்கு பெருமாள் சந்தன மண்டபம் வந்தடைவார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

காலை 7.15 மணி முதல் காலை 11.30 மணி வரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்ய பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவார்கள். பின்னர் மாலை 7 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

பகல்பத்து உற்சவத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாளான வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான வருகிற 2-ந் தேதி வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்று அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருளுவார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து செல்வார்கள்.

இதைத்தொடர்ந்து சொர்க்கவாசல் 3-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 8-ந்தேதி மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 9-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை. மேலும் 2-ந் தேதி முதல் தொடங்கும் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாளையொட்டி ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

ராப்பத்து 7-ம் திருநாளான 8-ந் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 9-ந் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 10-ம் திருநாளான 11-ந் தேதி தீர்த்தவாரியும், 12-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு பெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.


Next Story