வேன் டிரைவர் வீட்டில் நகை-பணம் திருட்டு


வேன் டிரைவர் வீட்டில் நகை-பணம் திருட்டு
x

பெரியகுளம் அருகே வேன் டிரைவர் வீட்டில் நகை, பணம் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி

பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் தாசில்தார் நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 53). சரக்கு வேன் டிரைவர். இவரது மனைவி ஜெயக்கொடி (47). இவர்களுக்கு சுந்தரபாண்டியன் என்ற மகன் உள்ளார். இவர்கள் அங்குள்ள காம்பவுண்ட் வீட்டில் வசித்து வருகின்றனர். பாலகிருஷ்ணன் வேலைக்கு சென்று விட்டார். சுந்தரபாண்டியனும் வெளியே சென்றார். வீட்டை தாழ்ேபாட்டு விட்டு ஜெயக்கொடி அருகே உள்ள கடைக்கு சென்றார். சிறிது நேரத்தில் சுந்தரபாண்டியன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தென்கரை போலீசாருக்கு சுந்தரபாண்டியன் தகவல் கொடுத்தார். அதன்பேரில் பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் திருடு போயிருப்பது தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் பைரவ் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர். அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. வீட்டில் பதிவான கைரேகைகளை கைரேகை நிபுணர் லோகேஷ் பதிவு செய்தார். இதுகுறித்து தென்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story