போலீசாரிடம் இருந்து தப்பிய கஞ்சா வியாபாரி வேன் மோதி பலி


போலீசாரிடம் இருந்து தப்பிய கஞ்சா வியாபாரி வேன் மோதி பலி
x

விசாரணைக்கு அழைத்து சென்றபோது போலீசாரிடம் இருந்து தப்பிய கஞ்சா வியாபாரி வேன் மோதி பலியானார்.

திண்டுக்கல்,

தேனி மாவட்டம் மயிலாடும்பாறையை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 36). இவர், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வி.எல்லைப்பட்டியில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். விருதலைப்பட்டியில் உள்ள ஒரு நூற்பாலையில் அவர் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

தேனி மாவட்டத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, நூற்பாலைகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கு பொன்னுச்சாமி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கூம்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நேற்று முன்தினம் மாலை தனிப்பிரிவு ஏட்டு குமாரசாமி, போலீஸ்காரர் முத்துக்குமார் ஆகியோர் எல்லைப்பட்டிக்கு சென்று பொன்னுச்சாமி வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பதுக்கி வைத்திருந்த 100 கிராம் கொண்ட 10 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

தப்பியோட முயற்சி

பின்னர் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக பொன்னுச்சாமியை வரும்படி போலீசார் கூறினர். இதையடுத்து பொன்னுச்சாமி தனது மோட்டார் சைக்கிளில் போலீஸ் நிலையம் புறப்பட்டார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் போலீஸ்காரர்கள் அவரை பின்தொடர்ந்து வந்தனர்.

வேடசந்தூர் அருகே காசிபாளையம்-கூம்பூர் சாலையில் நேற்று முன்தினம் இரவு சென்றனா். அப்போது போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக, கடம்பன்குறிச்சி அருகே திடீரென்று மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு பொன்னுச்சாமி தப்பி ஓட முயன்றார்.

வேன் மோதி பலி

அந்த நேரத்தில், எதிரே வந்த வேன் அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயமடைந்த பொன்னுச்சாமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அவரை பின்தொடர்ந்து வந்த போலீசார் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

எல்லை பிரச்சினை

இதற்கிடையே சம்பவம் நடந்த இடம் கூம்பூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டதா? அல்லது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டதா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் விசாரணை நடத்துவதில் போலீசாருக்கு சிக்கல் நீடித்தது.

ஒரு வழியாக சம்பவம் நடந்த இடம், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்டது என்று முடிவு செய்யப்பட்டது.

போலீஸ் விசாரணை

இதனையடுத்து சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் பொன்னுச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் பொன்னுச்சாமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வேனையும், அதனை ஓட்டி வந்த டிரைவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இறந்த பொன்னுச்சாமிக்கு கலையரசி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story