சென்னை சென்டிரல்-மைசூரு இடையே 'வந்தே பாரத்' ரெயில் சோதனை ஓட்டம்

தென் இந்தியாவின் முதல் ‘வந்தே பாரத்’ ரெயிலின் சோதனை ஓட்டம், சென்னை சென்டிரல்-மைசூரு இடையே நடைபெற்றது.
சென்னை,
இந்திய தொழில்நுட்பத்தில் அதிநவீன வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாடு முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். தொழிற்சாலையில் 'வந்தே பாரத்' ரெயில்களுக்கான பெட்டிகள் தயாரிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.
புல்லட் ரெயில் போன்ற தோற்றத்தில் இருக்கும் இந்த 'வந்தே பாரத்' ரெயில்கள் 100 கி.மீட்டர் வேகத்தை வெறும் 50 வினாடிகளில் எட்டிவிடக்கூடியவை. அதேபோல் 160 கி.மீட்டர் வரையிலான வேகத்திலும் செல்லக்கூடியவை.
நாட்டின் முதல் 'வந்தே பாரத்' ரெயில் சேவை டெல்லியில் இருந்து வாரணாசிக்கு கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இதுவரை இந்தியாவின் 4 வழித்தடங்களில் 'வந்தே பாரத்' ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
குஜராத் மாநிலம் காந்திநகரில் இருந்து மராட்டிய மாநிலம் மும்பை வரை இயங்கும் 'வந்தே பாரத்' ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த செப்டம்பர் 30-ந்தேதி தொடங்கி வைத்தார்.
பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
இந்த வரிசையில் 5-வது 'வந்தே பாரத்' ரெயில், சென்னை-மைசூரு இடையே இயக்கப்பட உள்ளது. தென் இந்தியாவின் இந்த முதலாவது வந்தே பாரத் ரெயில் சேவையை வருகிற 11-ந்தேதி பிரதமர் மோடி மைசூருவில் தொடங்கி வைக்கிறார்.
இந்த 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரெயிலின் சோதனை ஓட்டம், சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று நடந்தது. சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5.50 மணிக்கு மைசூரு புறப்பட்டது.
இந்த சோதனை ஓட்டத்தை, தெற்கு ரெயில்வேயின் பொது மேலாளர் பி.ஜி.மல்யா தொடங்கி வைத்தார். சென்னையில் இருந்து புறப்பட்ட 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரெயில் பெங்களூருவுக்கு காலை 10.25 மணிக்கும், மைசூருக்கு மதியம் 12.30 மணிக்கும் சென்றடைந்தது.
110 கி.மீ. வேகம்
வழக்கமாக சென்னை-மைசூரு இடையே இயக்கப்படும் அதிவேக ரெயிலான சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் 7¼ மணி நேரத்தில் இலக்கை சென்றடையும். ஆனால் வந்தே பாரத் ரெயில் ½ மணி நேரம் முன்கூட்டியே அந்த இலக்கை சென்றடைந்தது.
110 கி.மீட்டர் வேகத்தில் 'வந்தே பாரத்' ரெயில் சோதனை நடத்தப்பட்டது. படிப்படியாக இது 160 கி.மீட்டர் வரை அதிகரிக்கப்படும். இதன்மூலம் பயணிகளின் நேரம் மிச்சமாகும்.
வாரத்தில் புதன்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் சென்னை-மைசூரு இடையே இந்த 'வந்தே பாரத்' ரெயில்கள் இயக்கப்படும்.
பயணிகளுக்கு உணவு
சென்னையில் இருந்து மைசூருக்கு மதியம் 12.30 மணிக்கு சென்றடையும் வந்தே பாரத் ரெயில், அங்கிருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்பட்டு இரவு 7.35 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையம் வந்து சேரும். காட்பாடி, ஜோலார்பேட்டை, பெங்களூருவில் மட்டும் இந்த ரெயில் நின்று செல்லும்.
2 வகுப்புகள் கொண்ட இந்த ரெயிலுக்கான கட்டணம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும். தற்போது இருக்கை வசதிகளுடன் இயக்கப்பட்டாலும், படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு, காலை சிற்றுண்டி, மதிய உணவு, காபி, டீ போன்றவை ரெயில்வேயால் வழங்கப்படும். இதற்கான தொகை ரெயில் டிக்கெட் கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






