"வேதா நிலையம் விற்பனைக்கு அல்ல" - ஆடியோ வெளியிட்ட தீபா ஜெயக்குமார் மாதவன்


வேதா நிலையம் விற்பனைக்கு அல்ல - ஆடியோ வெளியிட்ட தீபா ஜெயக்குமார் மாதவன்
x

வேதா நிலையம் விற்பனைக்கு அல்ல என்று தீபா ஜெயக்குமார் மாதவன் ஆடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.

சென்னை,

வேதா நிலையம் விற்பனைக்கு என வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தீபா ஜெயக்குமார் மாதவன் ஆடியோ வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தீபா வெளியிட்டுள்ள வாட்ஸ் அப் ஆடியோவில் கூறியிருப்பதாவது:-

போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம், ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவின் பூர்வீக இல்லம். அவர் மறைந்த பிறகு ஜெயலலிதா வசம் ஒப்படைக்கப்பட்டது. அந்த வீட்டில் ஜெயலலிதாவும், தனது தந்தையான ஜெயராமனும் வாழ்ந்து வந்தனர். தற்போது ஜெயலலிதா இல்லாத சூழலில் அந்த வீடு தங்களுக்கே சொந்தம்.

ஜெயலலிதா அரசியலில் நுழைந்து முதல்-அமைச்சர் பொறுப்பு வரை உயர்ந்ததால் அவருக்கு உதவி செய்ய பல பேர் தேவைப்பட்டதாகவும், அவருடன் இருந்து உதவி செய்த காரணத்துக்காக அவருடைய சொத்துக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. இது சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் பொருந்தும்.

மிகப்பெரிய சட்டப்போராட்டத்துக்கு பின் வேதா நிலையம் தங்கள் வசம் வந்துள்ளது. அந்த வீட்டை கண்ணும் கருத்துமாக நாங்களே பராமரித்துக் கொள்வோம். கூடிய விரைவில் போயஸ் தோட்ட இல்லத்தில் குடியேற உள்ளோம்.

வேதா நிலையம் விற்பனைக்கு அல்ல. தயவுசெய்து வதந்திகளை பரப்ப வேண்டாம். இது எங்களின் அமைதியை கெடுத்து, தேவையற்ற அழுத்தத்தை எங்களுக்கு கொடுக்கிறது.

இவ்வாறு அந்த ஆடியோவில் தெரிவித்துள்ளார்.


Next Story